திங்கள், 13 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1 களம் 2

 

இரண்டாங்களம்

இடம்;-- சீதையின் அந்தப்புரம்

காலம் ;-- பிற்பகல்

பாத்திரங்கள்;-- இராமர், சீதை, தோழி மாணிக்கமாலை.

மாணிக்கமாலை :-- (சீதையைப் பார்த்து) அம்மா, என்ன ஏதோ யோசனையிலிருக்கிறீர்களே?

சீதை:-- மாணிக்கமாலை! சில நாழிகைகளாக என் இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது. என்ன காரணமாயிருக்கு மென்று யோசித்தேன். வேறொன்றுமில்லை.

மாணிக்கமாலை:-- இடதுகண் துடிப்பது நற்சகுனமாயிற்றே! கூடிய சீக்கிரத்தில் ஏதேனும் சுபசமாசாரம் கேட்பீர்கள். இதைப்பற்றித்தானே யோசித்தீர்கள்?

சீதை :-- ஆம்

மாணிக்கமாலை :-- வேறு மனக்குறை ஒன்றுமில்லையே?

சீதை;-- தோழீ! நீ கேட்பது அதிசயமாயிருக்கிறதே. எனக்கு மனக்குறை எப்படி வரும்? பெண்ணாய்ப் பிறந்தவர்களுள் என்னைப்போற் பாக்கியவதியும் உண்டோ? நலமுங் குலமுங் குணமும் ஒருங்கமைந்த உத்தம ரொருவரைப் புருஷராகப் பெற்றேன். அவர்க்கு என்மீதுள்ள அன்பினும் நான் விரும்பத்தக்க பொருள் எது? அவ்வன்பு மாறாதிருக்கும் வரை எனக்கு மனக்குறை ஏதடி, தோழீ!

மாணிக்கமாலை:-- அம்மணீ! தாங்கள் கூறுவது உண்மையே. தங்கள் நலங்களுக்கேற்ற நாயகரைப் பெற்றீர்கள். அழகிலுங் குணத்திலும் அவருக்குச் சமானமேனும் உயர்வேனும் உள்ள புருஷர் பிறர் ஒருவரை நான் இதுவரையிற் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

சீதை:-- அடி மாணிக்கமாலை! மிதிலையிற் கன்னிமாடத் தருகே அவரை முதன்முதற் கண்டபொழுது, அவர் அழகு ஒன்றையுமே கண்டு கரைகடந்த காதல் கொண்டேன். ஆனால் அப்பொழுது அவ்வழகுக் கேற்ற குணமுடையவராயிருப்பா ரென்று அநுமானித்திருந்தேன். இப்பொழுது இவரிடத்து நான் பிரத்தியக்ஷத்திற் காணும் குணாதிசயங்கள் அப்பொழுது அறிந்திருப்பேனாயின் வில்லை முறிக்குந் துணையுங்கூட அவரைப் பிரிந்து ஆற்றியிருந்திருப்பேனோ? தோழீ! அவர் என் ஆருயிரென்பேனோ, உலகைப் படைத்துண்டு உமிழ்ந்து வாமனனாகி ஈரடியாலதை யளந்த மாயவரென்பேனோ, பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமரென்பேனோ, அன்றி மனிதர்க்கும் தேவர்க்குந் தேவரென்பேனோ,

பங்கயக் கண்ண னென்கோ பவளச்செவ் வாய னென்கோ
அங்கதி ரடிய னென்கோ அஞ்சன வண்ண னென்கோ
செங்கதிர் முடிய னென்கோ திருமறு மார்ப னென்கோ
சங்குசக் கரத்த னென்கோ சாதி மாணிக் கத்தையே.

மதித்தற்கரிய மாணிக்கம் போன்ற அவரை, தாமரைக்கண்ண ரென்பேனோ, செம்பவள வாயரென் பேனோ, செந்திருவடிய ரென்பேனோ, கார்நிற வண்ணரென்பேனோ, அன்றி என் கண்ணுக்கினிய கதிர்முடியுடையரென்பேனோ, அல்லது சங்குசக்கர பாணியாய்த் திருமகள் தங்கிய மார்பினராகிய நெடுமாலென்பேனோ! அவரை எவரென்றெண்ணி எவ்வாறு புகழ்வேன்! ஆ, என் மனங்கொண்ட மணவாளரைத் தினங்கண்டு உரையாடி உடனிருந்து பணிவிடை செய்யும் பெரும்பாக்கியத்தைப் புண்ணிய வசத்தால் எய்தப் பெற்றேன். என் ஆயுளளவும் இவ்வின்பம் மாறாதிருக்க இறைவன் திருவருள் புரிய வேண்டும்.

மாணிக்கமாலை ;-- அம்மணீ! இறைவன் அங்ஙனமே திருவருள் புரிவாரென்பதிற் சந்தேகமில்லை. அம்மா, நாயகர் இப்பொழுது எங்குச் சென்றுள்ளார், தெரியுமோ?

சீதை:-- தெரியாது. என்னுடன் இன்னுரையாடி யிருந்தவரை மந்திரி சுமந்திரர் வந்து அழைத்துச் சென்றார். சென்று நாலைந்து நாழிகை யாய்விட்டது. இன்னும் திரும்பி வரவில்லை.

மாணிக்கமாலை :-- எதற்காக மந்திரி வந்து அழைத்துச் சென்றிருப்பார்?

சீதை;-- ஏதாவது இராஜாங்க காரியமாயிருக்கும். தோழீ! இந்த நாலைந்து நாழிகையும் எனக்கு நாலைந்து வருஷங்களாகத் தோன்றுகின்றன. வருகிறாராவென்று எழுந்து பார்த்து வா.

மாணிக்கமாலை :-- (எழுந்து சென்று வழியைப் பார்த்து விட்டு வந்து) இல்லையம்மா, அவர் வரவில்லை.

சீதை:-- என் கண்ணாளருக்குச் சகல நலங்களும் பொருந்தியிருக்கின்றன. ஆனால் ஒரு குறை மட்டுமிருக்கிறது.

மாணிக்கமாலை:-- அதென்ன குறையம்மா?

சீதை:-- சக்கரவர்த்திக்கு மூத்த குமாரராய்ப் பிறந்திருக்கின்றாரே, அந்த ஒரு குறைதான்.

மாணிக்கமாலை: -- அம்மணீ! அதுவும் ஒரு குறையோ?

சீதை:-- தடையென்னடி தோழீ! அதனாலல்லவோ இராஜாங்க விஷயமாய்ச் சில சமயங்களில் என்னைவிட்டு அவர் பிரியும்படி நேரிடுகிறது? இல்லாவிட்டால் என்றும் என் உடனிருப்பாரன்றோ? இந்த ஒரு குறைதான் சில சமயங்களில் என் மனத்தை வருத்துகிறது. ஆ, இதோ அவர் வருகிறார் போலிருக்கிறதே தோழீ! நீ சற்றே வெளியே சென்றிரு. (மாணிக்கமாலை போகிறாள். இராமர் வருகிறார். சீதை அவரை எதிர்கொண்டு அழைக்கிறாள். இருவரும் ஆசனத்தில் அமருகின்றனர்.) நாதா! ஏன் இவ்வளவு நாழிகை தாமதித்து விட்டீர்கள்? சென்ற காரியமென்ன? அடியாள் அறியக் கூடியதாயிருக்குமோ? தங்கள் முகத்தில் மகிழ்ச்சியும் விசனமும் கலந்து காணப்படுகின்றனவே.

இராமர்:-- கண்மணி! சீதா! உனக்கு அதிஉன்னத பதவியொன்று வந்தால் என்மனம் மகிழாதா?

சீதை:-- காதல! இதுவரை எனக்கில்லாத பதவி இனி என்ன வரப்போகிறது?

இராமர்:-- சீதா! இதுவரை நீ சக்கரவர்த்தியின் முதல் மருகியாய் இருந்தாய். நாளைமுதல் நீ சக்கரவர்த்தினியாகப் போகின்றாய்.

சீதை;-- பிராணபதி! அடியாளுக்கு ஒன்றும் விளங்கவில்லையே

இராமர்:-- காதலீ! நாளையதினம் உன் கொழுநனுக்கும் உனக்கும் பட்டாபிஷேகமாகப் போகின்றது.

சீதை:-- தங்களுக்குப் பட்டாபிஷேகமா? மாமா அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

இராமர்:-- உன் மாமனார் மூப்படைந்து விட்டாராதலால் தவஞ் செய்யக் காட்டிற்குச் செல்லப் போகிறார்.

சீதை:-- நாதா! தாங்கள் சொல்வது நூதனமாயிருக்கிறதே! நம்மைப்போல் இளம்பருவத்தினரல்லவா காட்டின் வனப்பைக் கண்டு களித்து அதில் ஆனந்தமாய் உலாவித் திரிந்து காலங்கழித்தற்குரியவர்! மாமா அவர்கள் மூப்புக் காலத்தில் தம் மனைவியரும் மருகியரும் உடனிருந்து உபசரிக்க நாட்டிலிருந்து சுகமாகக் காலங்கழிக்க வேண்டியவரன்றோ?

இராமர் (புன்னகையுடன்):-- என் உயிரே! ஆசிரமத் தருமங்களையே மாற்றப் பார்க்கின்றாயே!

சீதை:-- நாயக! நான் என் சிறுமதிக்குத் தோற்றியதைத் தங்களிடம் தெரிவித்தேனே யொழிய வேறில்லை. நாதா! தங்களுக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு நான் அடிக்கடி தங்களைவிட்டுப் பிரிந்திருக்கும்படி நேருமல்லவா?

இராமர் :-- காதலீ! குடிகளுடைய க்ஷேமத்தைக் கருதி அடிக்கடி வெளியே சென்று இராஜாங்க விஷயங்களைக் கவனிக்கும்படி நீயே என்னைத் தூண்டமாட்டாயோ?

சீதை:-- (சற்று யோசித்துவிட்டு) என் காதலா! குடிகள் குறை தீர்ப்பதற்குத்தானே தங்களை அரசராக நியமிப்பது! அதற்கு நான் சிறிதும் இடையூறாயிரேன். தங்கள்மீதுள்ள பிரியத்தால் தங்களைப் பிரிந்திருப்பதற்கு நான் வருந்தினாலும், குடிகள் க்ஷேமத்தை எண்ணி அவ்வருத்தம் ஒழிவேன். அன்றியும் இராஜாங்க காரியங்களில் உழைத்துத் தாங்கள் அயர்வடையுங் காலத்தில் அடியாள் தங்கள் உடனிருந்து என்னாலான பணிவிடைகளைச் செய்து தங்கள் அயர்வை ஆற்றுவேன்.

இராமர்:-- ஜானகி! உன் உத்தமக் குணமல்லவோ என்னை இவ்வில்லறத்தில் இழுத்தது! நான் ஜன்மாந்தரத்திற் செய்த நல்வினையின் பயனாலல்லவோ நின்னை மனைவியாகப் பெற்றேன்.

சீதை:-- பிராணேசா! பட்டாபிஷேகத்தைக் குறித்து மகிழ்ச்சி ஒருபுறமிருக்கத், தங்கள் முகத்தில் சிறிது விசனக்குறியும் தோற்றுகிறதே?

இராமர்:-- காதலீ! ஒரு தேசத்தை அரசாள்வதென்றால் சாமானியக் காரியமல்ல

கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியுங்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லா மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்.

அரசன் நியாயந் தவறுவானாகில் கிரகங்கள் நெறி நில்லா; கிரகங்கள் தவறுமாயின் மழை வளங்குன்றும்; மழை வளங்குன்றினால் உலகத்துயிர்களுக்குக் கெடுதியுண்டாகும்; அவ்வாறானால் உலகத்துயிர்களெல்லாம் அரசன் உயிரென்னும் தன்மை கெட்டுவிடும். ஆதலால் இதைவிட தாங்கற்கரிய பாரமெது? சீதா, அரசநீதி செலுத்துவதில் ஒருகால் தவறி விடுவோமானால் அதனால் வரும் பாபங்களுக்கெல்லாம் ஆளாக வேண்டுமே என்ற விசனந்தான் எனக்குச் சிறிதுள்ளது.

சீதை:-- நாயகா! தங்கள் அறிவையும் ஆற்றலையும் தாங்களே அறியாதிருக்கின்றீர்கள். நீதிக்கிருப்பிடமான தங்களால் செவ்வையாய் நீதி செலுத்த முடியாதென்றால், வேறு எவராலாகும்? அதைப்பற்றிச் சிறிதும் யோசனை வேண்டாம். காதல! இனி என் கிளிகளுக்குத் தங்களைச் சக்கரவர்த்தி என்று கூப்பிடக் கற்றுக் கொடுக்கட்டுமா?

இராமர்:-- உன் இஷ்டம்போற் செய். இனி நான் உன்னைச் சக்கரவர்த்தினீ என்றழைக்கட்டுமா?

சீதை:-- பிராணபதீ! தங்கள் திருவாக்கால் என்னைச் சீதா என்று அழைப்பதைவிட எனக்கு வேறொன்று இனிதாகத் தோற்ற வில்லை.

இராமர்:-- ஆனால் சரி; அப்படியே அழைக்கிறேன், சீதா!

சீதை:-- நாதா!

இராமர்:-- இன்று உனக்குச் சொல்லவேண்டிய விஷயம் வேறொன்றுள்ளது.

சீதை:-- அது என்னவோ?

இராமர்:-- நாளைய தினம் பட்டாபிஷேகமாதலால் இன்றைய தினம் நாம் இருவரும் உபவாசமாயிருந்து, இரவு, தருப்பை புல்லிற் சயனித்திருக்க வேண்டும்.

சீதை:-- அடியாள் உபவாசமிருக்கவும் தருப்பைப்புல்லில் சயனித்திருக்கவும் ஆக்ஷேபமில்லை. தாங்கள் பட்டினியிருக்க எவ்வாறு ஆற்றுவீர்கள்? தங்கள் அருமைத் திருமேனி தருப்பையில் படுக்கலுற்றால் வருந்தாதோ!

இராமர்:-- மாந்தளிரினும் மெல்லியளாகிய நீ இவ்விரதங்களை எவ்வாறு அநுஷ்டிப்பாய் என்றெண்ணி யல்லவோ நான் இதுவரை இதை உனக்குச் சொல்லத் தாமதித்தது. எனக்கு இவ்விரதங்களை அநுஷ்டிப்பது எளிதே யாகும். எவ்வாறானாலும் சற்காரியங்களுக்கு தம்பதிகள் விரதமனுஷ்டிக்க வேண்டுமென்பது பெரியோர் கொள்கை யாதலால் நாம் அவைகளை அநுஷ்டித்தே தீரவேண்டும்.

சீதை:-- நல்லது, ஆனால் அப்படியே செய்வோம். பிராணேசா! தங்களை விவாகக் காலத்திற் கண்டதுபோல், சர்வாபரணலங்கிருதராய் நாளைய தினமும் காண்பேன். இயற்கையாகவே மனோகரமான தங்கள் திருவுருவம், ஆடையணிகளால் சிறப்புற்றால் கண்ணுக்கு எவ்வளவு இன்பமாக விருக்கும் !

இராமர்:-- நாயகி ! நீயும் நாளையதினம் சர்வாபரணலங்கிருதையாய்க் காணப்படுவையல்லவா?

சீதை:-- ஆம்; நாதா ! இப்பொழுது எனக்கொன்று ஞாபகம் வருகிறது. (கழுத்திலணிந்திருந்த கற்களிழைத்த பதக்கார மொன்றினைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு) இந்தப் பதக்கம் என் தந்தை எனக்கு விவாகக் காலத்தில் கொடுத்தது. இதில் அருமையான பலவகைக் கற்கள் அமைந்திருந்தாலும் தங்கள் நிறத்துக்கீடாக ஒரு நீலக்கல் இல்லாதது என் மனத்திற்கொரு குறையாயிருக்கிறது. நாளைய தினத்திற்குள் இதின் நடுவே ஒரு நீலக்கல் வைக்கமுடிந்து வைத்தால், பட்டாபிஷேகச் சமயத்தில் அணிந்து கொள்வதற்கேற்றதா யிருக்கும்.

இராமர்:-- ஆனால் சரி. அதை இங்கே கொடு. இன்றைய தினமே உன் விருப்பப்படி அதில் நீலக்கல் ஒன்று வைத்துப் பதித்து வரச் செய்கிறேன். (பதக்கத்தை வாங்கக் கையை நீட்டுகிறார்)

சீதை:-- (சற்றுப் பின்வாங்கிக்கொண்டு) பதக்கத்தைத் தங்கள் கையில் தரமாட்டேன்.

இராமர்:-- சீதா ! நீயே தருவதாகச் சொல்லிவிட்டு இப்பொழுது ஏன் மறுக்கிறாய்?

சீதை:-- என் பிராணேசா ! இப்பதக்கத்தில் பல கற்கள் அமைந்துள்ளனவே !

இராமர்:-- இருந்தாலென்ன?

சீதை:-- நன்றாய் சொன்னீர்கள் ! மிதிலைக்கு வரும் வழியில் தங்கள் பாதம் பட்டுக் கல்லொன்று பெண்ணுருவாய் விட்டதே ! இங்கே தங்கள் அஸ்தம்பட்டு இப்பதக்கத்துள்ள கற்களெல்லாம் பெண்ணுருவடைந்து விட்டால் என்ன செய்கிறது !

இராமர் :-- (சிரித்துக்கொண்டு) அதற்கா அஞ்சுகிறாய் ! ஆனால் அப்பதக்கத்தை நீயே வைத்துக்கொள். மந்திரியிடம் சொல்லி உன் விருப்பப்படி செய்விக்கிறேன். (எழுந்து போகின்றனர்)

மூன்றாம் களம் 15-06-2016 அன்று தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக