புதன், 24 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

21. பாதுகையின் பாரதந்த்ர்ய உச்ச நிலை

பாதுகாதேவி இராமனுக்கு வசப்பட்ட நிலயில் உள்ளவளே யன்றிச் சுதந்திர நிலையை ஏற்பவளல்லள். இராமனேயே உயிராகக் கொண்ட லக்ஷ்மணனும் பரதனும் பிராட்டியும் கூடச் சுதந்திரத்தைக் கைக்கொண்டு இராமன் சொல்லுக்கு உடன்படாத நிலமை பெற்ற துண்டு. லக்ஷ்மணன் வனத்துக்கு வருவதைத் தடுத்து அயோத்தியிலே இருக்கும்படி இராமன் கட்டளையிட்டானே! லகஷ்மணன் அவ்வாறு செய்தானா? பரதனே முடி சூட்டிக் கொள்ளும்படி கட்டளையிட்டானே! பரதன் உடன் பட்டானா? பிராட்டிக்கு இராமன் வனத்தில் உள்ள கஷ்டங்களையெல்லாம் விளக்கி மாளிகையிலேயே இருக்கும்படி கூறினனே! செவி சாய்த்தாளா? இராமனுக்கு முன்பே புறப்பட்டாளே? நம் பாதுகாதேவியோ அத்தகையவ ளல்லள். நாட்டுக்குத் திரும்புமாறு கட்டளையிட அவ்வாறே செய்தாள். முடி சூட்டிக் கொள்ளும்படி நியமித்ததற்கு ஏற்பப் பரதன் சூட்டிய முடியை ஏற்றாள். நாட்டிலேயே வாழும்படி நியமித்ததற்கும் இசைந்தாள். இங்ஙனம் இராமபிரான் சொன்ன வண்ணம் செய்து பரதந்த்ர நிலயில் அம் மூவரையும் வென்றுவிட்டாள் பாதுகாதேவி. இப்படி ஒரு தோற்றம் தேசிகனுக்கு.

22. பாதுகைக்கு அரசாளும் திறமை உண்டு

மற்றெரு சுவைமிக்க அம்சம். பரதன் குடிமக்களுடனும் தாய்மாருடனும் சித்திர கூடத்துக்கு வந்திருக்கிறன். ஆள்பவன் இல்லாத நாட்டைக் காக்க இராமனை மீட்டு வருவதாக மக்களுக்கு உறுதி கூறியுள்ளான். பின் விளைவு என்ன? மரவடியை வாங்கிக்கொண்டு வந்து நிற்கின்றான் பரதன். நாட்டைத் தாங்கி நிற்க இராமபிரானையே எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். பரதன் தான் ஆராய்ந்து பார்த்தே பாதுகையை வாங்கி வந்ததாகக் கூறுகின்றன். அதாவது நாட்டைத் தாங்குமவன் இராமபிரான். அவனையும் சேர்த்துத் தாங்கும் பாதுகைக்கு நாட்டைத் தாங்குவது கடினமோ? உள்ளே ஒரு வஸ்துவைக் கொண்ட ஒரு பேழையைச் சுமப்பவனுக்கு உள்வஸ்துவைச் சுமக்கும் சக்தியில் ஐயமுண்டோ? இதைச் சிந்தித்துப் பார்த்துத்தான் அவ்வாறு செய்ததாகக் கூறுகின்றான். குடிமக்கள் மிக்க தெளிவு பெறுகின்றனர். இதை ஸ்வாமி தேசிகன் மிக அழகாய் விளக்குகின்றார்.

23. பெருமாள் நான்கு வடிவு கொண்ட கரணம்

மற்றும் ஓர் அம்சம். அடியார்களான தேவர்களுக்கு இன்னல் புரிந்து வந்த இராவணன் முதலிய எதிரிகளை ஒழிப்பதற்காகத் தன் ஸர்வேசுவரத் தன்மையை மறைத்து மனிதவுருக்கொள்ள வேண்டிய அவசியம் வந்தது எம்பெருமானுக்கு. அதற்காக இராமனாக மட்டும் அவதரித்தால் போதுமே பரதன்-லசஷ்மணன்-சத்ருக்நன் என்ற மூன்று தம்பிகளுடன் அவதரிக்க வேண்டுமோ என்ற ஐயம் எழலாம். இதற்கு விடை காண்கின்றார் தேசிகன்-பாதுகையின் பெருமையைச் சிந்திக்கின்றான் எம்பெருமான். மற்றவர்கள் அதில் ஈடுபட்டு ஆராதிப்பதுபோல் தானும் பூஜிக்கவேண்டுமென்று ஓர் ஆசை எழுகின்றது. தானே இராமனாக அவதரித்ததால் தன் பாதுகையைத் தானே ஆராதிப்பது நகைப்புக்கு இடமாகு மென்று கூசுகின்றான். அதற்காகத் தன் தம்பிகளாகவும் வடிவு கொண்டு அவர்களைக் கொண்டு பாதுகாராதநம் செய்வித்துத் திருப்தி பெற்றான். அந்தப் பாதுகையே திருவரங்கன் திருவடியில் சேர்ந்து நிற்கும் நிலையில் இராமபிரான் நேரிடையாகவே அந்தப் பாதுகையைத் தொழுவதில் இடர் எதுவும் இல்லை. தசரதர் மாளிகையில் இக்ஷ்வாகு வம்சத்துக்குக் குலதனமாய்த் திருவாராதனத்தில் இருந்து வந்த பெரிய பெருமாளை அவனது அவதாரமான இராமபிரான் அனுதினமும் வணங்கி வழிபடவில்லையா? உண்மையில் தன் தொடர்பை மறந்து வஸ்துவின் பெருமையை மட்டும் நோக்கும்போது இராமனே தன் பாதுகையை வழிபட்டாலும் குற்றமில்லை. திருமங்கையாழ்வார் பத்தராவிப் பெருமானப்பற்றி அதியற்புதமான பாசுரங்களைக் கொண்ட ஒரு பதிகமிட்டு அவனேயே அழைத்து அவனைப் பற்றியதேயாயினும் பொருளின் சுவையைக் கொண்டு தம்மிடம் அப்பதிகத்தைக் கற்றுக் கொள்ளும்படி கூறவில்லையா? இப்படி இராமனே வழிபடுதற்கு உரியது பாதுகையென்று நமக்குப் போதிக்கின்றார் தேசிகன்.

24. பாதுகை பேரரசி

உலகப் படைப்பு. காத்தல் முதலியனவெல்லாம் பாதுகாதேவியின் லங்கல்பத்தாலேயே நடைபெற்று அவள் பேரரசியாய் விளங்குவதாய்க் கண்முன்னே காண்கின்றார் தேசிகன். இந்தப் பெண்ணரசியின் ஆட்சிச் சிறப்பைக் கண்டு வியக்கின்றார். இப்படி அவளே அரசியாய் நின்று நடத்துவதாயின் பாதுகை என்று மட்டுமே அழைக்காமல் திருவரங்கன் பாதுகை ராமபாதுகை என்று ஆணினத்தைச் சேர்த்தே வழங்குவது ஏன்? என்று ஒரு கேள்வியை எழுப்புகின்றார். அதற்குக் காணும் விடை- அக்காலத்தில் பெண்ணினத்தின் ஆட்சிக்கோ அரசுரிமைக்கோ மதிப்பு இருந்ததில்லை. அக்குறை வராதிருப்பதற்காகத் திருவரங்கன் இராமன் ஆகிய ஆணினத்தை முற்பட்டுக் கூறலாயிற்று. உண்மையில் பாதுகாதேவியின் ஆட்சியே முழுவெற்றி கண்டதாகக் கூறி மகிழ்கின்றார். இக்காலத்தும் நாடுகளில் பெண்ணாட்சி சிறப்புடன் நடந்து வரவில்லையா? ஆகவே பாதுகை முடிசூடியபின் அரியணையில் அமர்ந்து அகண்ட பூமண்டலத்துக்கும் பேரரசியாயிருந்து முறையோடு ஆண்டதாகப் போற்றுகின்றார் தேசிகன்.

25. பாதுகையின் ஆட்சியே குற்றமற்றது

பதினான்கு ஆண்டுகள் நடந்த பாதுகையின் ஆட்சியில் ஏதாவது குறை கூற முடியுமா? இராமனது ஆட்சியில் குறைகள் உண்டு. தகுதியில்லாத சம்புகன் பெருந்தவம் புரிந்தான். அவனை இராமபிரான் கொன்றுவிட நேர்ந்தது. ஓர் அந்தணச் சிறுவன் அகாலமரணமடைந் தான். அந்தணன் வந்து இராமனது ஆட்சியைப் பழித்தான். அதற்காகப் பெருமுயற்சி கொண்டு அவனைப் பிழைப்பிக்க நேர்ந்தது. எப்படியும் குறை குறைதானே! இத்தகைய குறை எதுவுமின்றியன்றோ பாதுகாதேவி ஆட்சி புரிந்துவிட்டாள்! ஆகவே ராமராஜ்யத்தினும் பாதுகாராஜ்யம் மிகப் பெருமை பெற்றதாகக் கூறுவதற்கு என்ன தடை? இதை எடுத்துப் புகழ்கின்றார் தேசிகன்.

26. பாதுகை பின் இளவரசியாதல்

பாதுகை ஒப்பற்ற சிறப்போடு நாட்டை ஆண்டு 'பாதுகாராஜ்யம்' என்ற பெயரை வாங்கித் தந்தது. இராமபிரான் வனத்தினின்று நாட்டுக்குத் திரும்பியபின் பாதுகாராஜ்யம் முடிந்து விட்டதென்று கருத வேண்டாம். பொறுப்பை ஏற்றவர் உரியவர் திரும்பியதும் அவரிடம் சேர்ப்பதென்ற ப்ராமாணிக முறையைத் தழுவி இரண்டு பாதுகைகளும் தம் பெருந்தன்மையால் வனத்திலிருந்து திரும்பிய இராமன் திருவடிகளிடமே பேரரசுரிமையைத் தந்தன. ஆனால்தாம் இளவரசுரிமையைச் சாச்வதமாகப் பெற்று நாட்டை எந்நாளும் ஆண்டுவந்தனவென்று பாதுகையின் மனப்போக்குக்கு வியக்கின்றார் தேசிகன்.

27. பாதுகை எந்நாளும் பொறுப்புடையள்

பல்லாண்டுகள் இராமனைப் பிரிய நேரிட்ட பூமியை எக்குறையும் வராது இராமனிலும் சிறப்பாகத் தாங்கி நின்றாள் பாதுகை. அவன் வனத்தினின்று மீண்டதும் தான் தாங்கிநின்ற பூமியை அவனிடம் சேர்த்து அவனே தாங்குமாறு செய்தாள். பின் பூமியைத் தாங்கும் இராமனேயும் சேர்த்து எந்நாளும் தாங்கி நின்றாள் பாதுகை. தாங்கும் பொறுப்பு பாதுகையை விட்டு எந்நாளும் அகலவில்லை. வேறு யாருக்கு இந்தச் சக்தி உண்டு? என்று கேட்கின்றார் தேசிகன்.

28. பாதுகையே மோக்ஷம் தரவல்லது

செளநக பகவான் அர்ச்சைவடிவு கொண்ட எம்பெருமானே சரணமடைந்தவர்க்கு எளிதில் மோக்ஷத்தைத் தருவதாக அருளிச் செய்துள்ளான். த்வயமென்னும் ரஹஸ்யம் அவன் திருவடிகளையே மோக்ஷத்துக்கு உபாயமாகக் காட்டுகின்றது. தேசிகன் இன்னும் ஒரு படி முன் சென்று திருவரங்கன் பாதுகையே மோக்ஷத்தை எளிதில் தரவல்லதென்று கண்டு அதன் பெருமையைப் புகழ்கின்றார். திருவரங்கனது கருணைதானே பாதுகை வடிவு கொண்டதென்று காரணமும் காட்டுகின்றார்.

29. பிராட்டியும் பாதுகையை வணங்குதல்

வனவாசம் முடிந்து இராமபிரான் பிராட்டியுடன் நாட்டுக்குத் திரும்புகின்றான். இச்செய்தியை அனுமன் வாயிலாகக் கேட்ட பரதாழ்வான் மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கித் திருப்பாதுகங்களைத் தன் முடிமேல் எழுந்தருளச் செய்து ஸகல பரிவாரங்களும் புடை சூழ மரியாதைகளுடன் இராமபிரானிடம் வருகின்றான். அவன் முடியில் பாதுகைகளைக் காண்கின்றாள் சீதைப் பிராட்டி. உடனே அப்பாதுகையை வணங்கி உரிய உபசாரங்களைச் செய்கின்றாள். எதனால்? பிராட்டி தன் மெல்லிய திருக்கையால் வருடி இன்புறும் திருவடியைக் காத்துத் தருவது பாதுகைதானே! மேலும் சீதை இராமனுக்குத் தேவி. பாதுகையும் ஒரு தேவிதானே! பாதுகை முன்பே முடிசூட்டு விழாவைப் பெற்றவளாதலின் முதியவளாகின்ருள். இனி முடிசூடுதலைப் பெறப்போகும் சீதை இளையவள்தானே! சாஸ்த்ர முறைப்படி இளையவள் மூத்தவளை வணங்கி வழிபடுதல் பொருத்தமானது தானே! பிராட்டி தான் மட்டுமன்றித் தன்னுடன் வரும் தாரை முதலிய தோழியருக்கும் பாதுகையை வணங்கி நலம் பெறும்படி உபதேசிக்கின்ருள். இந்தச் சிறப்பை நினைந்து மனமுருகுகின்ருர் நம் தேசிகன்.

30. அர்ச்சை வடிவுக்கும் பாதுகை அவசியமாதல்

அர்ச்சைத் திருமேனியிலும் திருவரங்கன் பாதுகையை அணிந்து கொண்டு அற்புதக் காட்சியளிக்கின்றான். இராமனாய் நின்றபோதுதான் ஸஞ்சாரத்துக்குப் பாதுகை அவசியமாகின்றது. அர்ச்சை வடிவில் பள்ளி கிடக்கும் திருவரங்கனுக்குக் கூடப் பாதுகை அவசியமா? இல்லை. ஆனால் உயர்ந்த அரசியாய் விளங்கி நாட்டை ஆண்ட பாதுகாதேவியை விடவும் திருவரங்கனுக்கு மனமில்லை. அதற்காக ஒரு யுக்தி செய்தான் திருவரங்கன். அர்ச்சா ஸமாதியை மறந்தான். இராமாவதாரம் முடிந்த பின்பும் தன்னை இராமனாகவே கருதிக் கொண்டான். இதை உணர்ந்த பாதுகை தானே திருவடியில் வந்து சேருகின்றது. இப்படி அவன் சாதுரியத்தை வியந்து பேசுகின்றார் தேசிகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக