திங்கள், 22 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

8. பாதுகை -- ஆழ்வார் -- ஸ்ரீசடாரி எல்லாம் ஒன்றே
ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரத்தில் ஒவ்வொரு பத்ததியிலும் உள்ள விசேஷங்களையெல்லாம் இங்கு விரிக்கில் இதுவே ஒரு பெரிய நூலாய்ப் பெருகிவிடும். ஏதோ ஸ்வாமி பாதுகையை அநுபவித்த முறையை நம் சிற்றறிவுக்கு எட்டிய வரை சிறிது பேசி மகிழ்வோம். விபவ தசையில் இருந்த இராமன் அர்ச்சைத் திருமேனியில் உள்ள திருவரங்கனை வணங்கி வழிபட்டபோதிலும் இரண்டு மூர்த்திகளும் ஒருவரே யென்னும் உண்மை நிற்க அர்ச்சைத் திருமேனியில் உள்ள இனிமை திருவரங்கன் தன்னையே கவர்ந்து தானே இராமனது உருக்கொண்டு ஆராதிப்பவனும் ஆராதிக்கப்படுபவனும் தானேயாக இருந்த உண்மையையும் உணர்ந்து அநுபவித்தல் சிறக்கும். ஆகவே இந்தத் திவ்ய ஸூக்தியை அநுபவிக்கும்போது இராமன் பாதுகை -- திருவரங்கன் பாதுகை -- நம்மாழ்வார் -- ஸ்ரீசடாரி இந்த நான்கும் ஒன்றிநின்றே நமக்குத் திவ்ய அநுபவத்தைக் கொடுப்பதான உணர்ச்சி நமது உள்ளத்தில் உதிக்கும். உதிக்கவேண்டும்.
9. நூலின் தொடக்கத்தில் புகழப் பெற்றவர்.
ஸ்வாமி தேசிகன், திருவரங்கனது பாதுகையை முடியில் தரிக்கும் பாக்யவான்களின் திருவடிப் புழுதிபட்ட இடங்களிலெல்லாம் க்ஷேமம் பெருகுமென்று புகழ்ந்துகொண்டே நூலைத் தொடங்குகின்றார். அடுத்துப் பரதாழ்வான் நினைவு வருகின்றது. எதனால்? பரதன் இராமபிரானிடமிருந்து பாதுகையைப் பெற்றுவந்து அதன் தலைமையில் அரசாட்சியை நடத்தியதால்தானே பாதுகையின் பெருமை உலகுக்கு அறியலாயிற்று! பின் நம்மாழ்வாரைத் தொழுகிறார். நம்மாழ்வார் -- பாதுகை இருவருக்கும் சடாரி என்றே பெயர். அவர் கண்ட தமிழ்மறைதானே பகவதனுபவத்திற்கு வழிகாட்டுகின்றது. பின் சரணாகதி வேதமான ஸ்ரீமத் ராமாயணத்தை அவதரிப்பித்த வால்மீகி முனிவரைப் போற்றுகின்றார். வடமொழிநூலை முதன் முதலாக இவ்வுலகில் தோற்றுவித்த பெருமையும் பாதுகையின் பெருமையை உலகுக்கு முதலில் வெளியிட்ட சிறப்பும் வால்மீகி முனிவருடையதுதானே! பின் பாதுகையின் அனுபவத்தில் இறங்குகின்றார் தேசிகன்.
10. ஸ்ரீசடாரியால் வரும் நல்வாழ்வு.
பலர் ஆழ்வார்களின் அருளிச் செயலைப் பயிலும் பாக்கியமில்லாதவர். அவர்களிடம் எம்பெருமான் திருவுள்ளம் உகப்பதில்லையாம். அவர்களின் கதி என்ன? கருணாமூர்த்தியான நம்மாழ்வார் அவர்களை உய்விப்பதற்காக ஸ்ரீசடாரியின் வடிவு கொண்டாராம். அவர்கள் முடியிலும் ஸ்ரீசடாரி எழுந்தருள்வதால் எம்பெருமானுக்கு இருந்த வெறுப்பு மாறி அவர்களும் நல்வாழ்வு பெறுகிறார்களாம். இது தேசிகன் கண்ட ரஹஸ்யம்.
11. ஆழ்வார் வேளாளர் குலத்தில் அவதரித்தது ஏன்?
நம்மாழ்வார் அந்தணர் முதலிய குலத்தைவிட்டு வேளாளர் குலத்தில் ஏன் அவதரிக்கவேண்டும்? என்று ஒரு கேள்வி. இதற்கு உரிய விடை காண்கிறார் நம் தேசிகன். அந்தணர் குலம் எம்பெருமான் திருமுகத்தினின்றும் அரசர் குலம் அவன் திருத்தோளினின்றும் வைசிய குலம் அவன் துடையினின்றும் வேளாளர் குலம் அவன் திருவடியினின்றும் தோன்றியதாக வேதமே ஓதுகின்றது. அவன் திருவடிதானே மற்ற திருவவயங்களைக் காட்டிலும் அடியார்களுக்கு நல்வாழ்வளிக்கும் முக்கிய சாதனமாய் விளங்குவது! அந்தத் திருவடியினின்று தோன்றிய குலத்துக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பை மறுக்க முடியாதே!
அந்தச் சிறப்பை நாடறியச் செய்வதற்காகவே நம்மாழ்வார் அக்குலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாராம். பாதுகையோ அந்தத் திருவடிக்குக் காப்பாயுள்ளது. அந்தக் குலத்தில் அவதரித்த நம்மாழ்வார் தாமே இந்நிலவுலகில் முதல் ஆசார்யனாய்த் திகழ்கின்றார். அவரே பாதுகையாகிச் சடாரியென்ற பெயரையும் பெறுகின்றார்.
12. ஆழ்வாரும் பாதுகையும் செய்யும் உதவி.
வேதமே அனைத்துக்கும் மூலமாய் விளங்குவது. அதைக் கற்பதற்குத் தகுதி குறிப்பிட்ட சில வகுப்பினர்க்கே உண்டு. அதன் பொருளை அறிய எல்லார்க்கும் உரிமை உண்டு. ஆழ்வாரும் பாதுகையும் சடகோபன் என்ற பெயருடையவர். ஆழ்வார் வேதத்தின் உட்கருத்தைப் பொதித்து தமிழ் மறையாக்கி எல்லாரும் கற்பதற்கு உரியதாக்கினார். வேதத்தின் பொருளாய் விளங்குமவன் திருவரங்கன். பாதுகையோ அவனை வீதியில் அழைத்துவந்து அவனை அனைவரும் கண்டு களிக்கச் செய்கின்றது. இப்படி ஆழ்வாரும் பாதுகையும் வேதத்தையும் அதன் பொருளையும் முறையே காட்டிக் கொடுத்த பெருமையைப் புகழ்கின்றார் நம் ஆசார்ய ஸார்வபௌமர்.
13. இந்த நூல் பாதுகையின் இனிய நாதமே.
ஆழ்வாருக்கும் பாதுகைக்கும் உள்ள "சடகோபன்" என்ற திருநாமத்தை மிக்க பொருத்தமுடையதாய்க் காண்கின்றார் தேசிகன். ஆழ்வார் ஆயிரம் பாசுரங்களைத் தோற்றுவித்தார். பாதுகையோ இந்தப் பாதுகாஸஹஸ்ரம் என்ற பெயரில் ஆயிரம் சுலோகங்களைப் பிறப்பித்தது. பாதுகையின் இனிய நாதமே இந்த நூல் வடிவு கொண்டது. பாதுகையே தம்முள் புகுந்து தம் வாயினின்று இந்த ஆயிரம் ஸூக்திகளையும் எழுப்பியதாம். ஆழ்வார் தாம் அருளிச்செய்த திருவாய்மொழியையே எம்பெருமான் தம்முள் புகுந்து தாமே பாடுவித்துத் தம்மைப் பெயரளவில் நிறுத்தியதாகக் கூறவில்லையா? இப்படி ஆழ்வாரும் பாதுகையும் ஆயிரம் செய்யுளைக் கொண்ட நூல்களை அவதரிப்பிப்பதாய்க் கூறி மகிழ்கின்றார் தேசிகன். இது ஒரு ஸாத்துவிகத் தியாகம்தானே?
14. ஸாத்துவிகத் தியாகம் பாதுகையளவும் செல்லல்
எந்தக் கடமையைச் செய்தாலும் ஸாத்துவிகத் தியாகம் மிக அவசியமானது. 'எம்பெருமான் தான் கொடுத்த சரீர -- இந்திரியங்களைக் கொண்டு தான் கொடுத்த அறிவின் துணைகொண்டு தன் உகப்புக்காகத் தானே முன் நின்று செய்விக்கின்றான்' என்ற உணர்ச்சியே ஸாத்துவிகத் தியாகமெனப்படுகின்றது. இதை எம்பெருமானுடனும் அவன் திருவடியுடனும் நில்லாது அவன் பாதுகை வரையில் செய்தால்தான் நிறைவு பெறுமென்றும் இதுவே உச்சநிலையென்றும் காட்டுகின்றார். இல்லையேல் யாகம் முதலிய கருமங்களுக்குப் பசுவதமும் வேள்வி செய்ததாய்ப் பெயர் பெறுவதுமே பலனாய் முடியுமென்று விளக்குகின்றார் தேசிகன்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக