புதன், 28 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி – வேட்டைக்குப் போறார் இராமன்

vettai இன்று 8ம் நாள் உத்ஸவம். சற்று முன் இராமன் வேட்டைக்கு எழுந்தருளினார். புறப்பாடு எல்லாம் சகடை என்றான பின்னர், தோளில் எழுந்தருள்வது இன்று ஒரு வேளை மட்டுமே. வேட்டையாட வேணுமாய் கோவில் ஸ்தானீகர் பிரார்த்திக்க அதை ஏற்று பெருமாள் வேட்டையாடும் பாவனையிலே முன்னும் பின்னுமாய் மும்முறை போய் வந்து இந்த வேட்டையாடும் நிகழ்ச்சி நிறைவுறும். அதன்பின் இரவிலே குதிரை வாகனப் புறப்பாட்டின்போது அதே இடத்திலேயே பெருமாள்/ இராமன் வேட்டையாடிய பாவனையில் ஒரு முயலைக் காண்பித்து கொண்டு வந்தவருக்கு மரியாதைகள் செய்வதும் வழக்கம். பங்குனி பதிவிலே பெருமாள் வேட்டையாடியதை வீடியோவாக மட்டும் இட்டிருந்தேன்.  அதைத் தொடர்ந்து நிகழும் இன்னொரு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

mun.tk அந்தக் காலத்து மன்னர்கள் ஆட்சியின் போது அரசர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவர்கள் கிராம முன்சீப்புகள். சில இடங்களில் இவர்களுக்கு மணியகாரர், நாட்டாமை என்றும் சொல்வதும் உண்டு. எங்கள் ஊரில் அவர்கள் பரம்பரையாய் வசித்து வரும் வீடு பெருமாள் திருவீதி வலம் வரும் தெருவை விட்டு சற்று உள்ளடங்கி இருக்கிறது. வழக்கமாக பெருமாள் புறப்பாட்டில், தேரடியில் ராஜ மரியாதை ஆன பிறகே மற்றவர்கள் உபகாரங்கள் கண்டருளப் பண்ணமுடியும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். மற்றவர்களுக்கு அதன்பின் தெருவில் தனி மரியாதைகள் ஏதும் கிடையாது.

mtk ராஜாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் கிராம முன்சீபுக்கு மரியாதைகள் செய்யப்பட வேண்டும் என அந்த நாளைய அரசர்கள் விருப்பத்தின் பேரில் இந்த எட்டாம் நாள் மாலை மட்டும் பெருமாள்/இராமன் வேட்டையாடிய பிறகு, மேல ரத வீதியிலிருந்து மாட வீதியை இணைக்கும் சந்தில் நுழைந்து அங்கிருக்கும் முன்சீபு வீட்டாருக்கு அருள் பாலிப்பது என ஒரு ஏற்பாட்டைச் செய்து வைத்துள்ளனர். தினமும்5 நிமிடங்களுக்குள்ளாக ராஜ மரியாதை, மற்றவர்கள் வீட்டெதிரில் ஒரிரு நிமிடங்களே பெருமாள் நின்று சமர்ப்பிக்கும் உபகாரங்களை கண்டருளல் என்கிற நிலையில், முன்சீபு வீட்டு வாசலில் மட்டும் நிறைய நேரம்(சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக) நின்று அனுக்ரஹித்து, அங்கு அளிக்கப் படும் திருக்கண் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அப்படியே மாட வீதி வழியாகவே கோவிலை அடைவது என்பது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.

இன்று முன்சீபுகள் இல்லைதான். ஆனாலும் அந்த குடும்ப வாரிசுகளுக்கு அளிக்கும் மரியாதைகள் இன்னும் தொடர்கின்றன. முன்சீபு குடும்ப வாரிசுகளும் இதை விடாமல் கொண்டாடி பாக்யத்தை அனுபவிக்கின்றனர். இவைகள் இங்கு வீடியோவாக!

வேட்டையாடப் போறார்!

முன்சீப் வீட்டு வாசலில் திருக்கண்

 

 

2 கருத்துகள்:

  1. மரபு வழி மரியாதை பெறும் குடும்பத்தினர், கைங்கர்யங்களில் இன்னும் ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேணும்! நல்ல மரபுகள் தொடர வேண்டும்! வேட்டைகார ராகவனுக்கு வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  2. மக்கள் இப்படி பெருமாளிடமே மரியாதை எதிர்பார்கிறார்கள். என்ன செய்வது?


    மதுரையில் பட்டர் ஒருவர் தனக்கு மரியாதை வேண்டாம். நான் வழிபடும் வீரராகவ பெருமாளுக்கு மரியாதை கொடுங்கள் என்றாராம்.
    பட்டர் இப்படி சொன்ன காரணம்.???
    அவருக்கு தெரிந்து உள்ளது. பெரியவர் பரம்பொருளான பெருமாள் அவர் நமக்கு மரியாதை தரலாமா! பெருமாளுக்கு இணை பெருமாளே என்று.... இன்றளவும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது வீரராகவ பெருமாளுக்கே மரியாதை கொடுக்கிறார் கள்ளழகர்.

    பதிலளிநீக்கு