புதன், 3 அக்டோபர், 2018

இராமாயண தருமம்

2.

ஸ்ரீவால்மீகி ராமாயணம்

ஆரண்ய காண்டம் –– சருக்கம். 37. சுலோகம் 13

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:'””

"ஸ்ரீராமன் உருவங்கொண்ட தருமம்போலும், நற்குணமுடையோனும், உண்மையான தோள்வலியுற்றவனுமாகின்றனன்" என இராவணனுக்கு, ராமத்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.

யுத்த காண்டம் சரு.28. சுலோ.19

யஸ்மின் ந சலதே தர்மோ யோ தர்மம் நாதிவர்த்ததே| ஸ ஏஷ ராம:

எவரிடமிருந்து தருமம் சலிக்கவில்லையோ, எவர் தருமத்தைவிட்டு விலகவில்லையோ, அவரே இந்த இராமபிரான் என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

யுத்த கா. சரு.91. சுலோ. 69

தர்மாத்மா சத்ய சந்தஸ்ச ராமோ தாசர திர்யதி|
பௌருஷே சாப்ரதித்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்|||

"ஸ்ரீராமபிரான் தர்மஸ்வரூபி என்பதும், சொன்னசொற் தவறாதவர் என்பதும், இணையற்ற பராக்ரமம் உடையவர் என்பதும் உண்மையாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும் " என சபதபூர்வமாயுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்.

ஸ்ரீபாகவதம் - ஸ்கந்தம் 9 -- அத்யாயம் 10 -- சுலோகம் 55

"ஏக பத்நீவ்ரததரோ ராஜர்ஷி சரித: சுசி: |

ஸ்வதர்மம் க்ருஹமேதீயம் சிக்ஷயந்ஸ்வய மாசரந் ||'”

"இராமபிரான் ஏகபத்நீ வ்ரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவரவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரீக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப்பிரம்ம ரிஷியின் வசனம்.

கம்ப ராமாயணம்

“தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” (அயோத்தி நகர் நீங்கு. 163)

நல்லற நிறுத்த நணுகித்,
தாமராவணை துறந்து தரை நின்றவரை” (ஆரணி.விராத.30)

இராமபிரான் உலகத்தில் தருமத்தை நிலைநிறுத்தவே அவதரித்திருப்பதாக, கவிக்கூற்று.

“சூரறுத்தவனுஞ் சுடர் நேமியு
மூரறுத்த வொருவனு மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்.” (ஆரணி – அகத்தி 22)

வெம்புகண்டகர் விண்புக வேரறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற்
கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லுநம் மாணையே (கிட்கிந்தா – கிட்கிந்தை 4)

உலகத்தில் துஷ்ட நிக்கிரகமும், தர்ம ஸம்ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்.

“பின்னையேது முதவுந்துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடைநுடங்கிட விரைந்து தொடர்வா
னன்னையே யனையவன் பினாவோர் கடமைவிட்
டென்னையே நுகர்தி யென்றன னெழுந்து விழுவான் (ஆரணி. விராத. 39)

இராம லட்சுமணர் உலகத்துக்கெல்லாம் தாயைப் போன்ற அன்பினையுடைய தருமசுவரூபிகள் என சீதாபிராட்டியின் வசனம்.

ஓயாத மலரயனே முதலாக வுளராகி
மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீயாகின் முதற்றாதை நெறிமுறையா லீன்றெடுத்த
தாயாவார் யாவரே தருமத்தின் றனிமூர்த்தி

பிரமதேவன் முதலான சகல தேவர்களுக்கும், உலகத்திலுள்ள உயிர்களுக்கும், இராமபிரான் முதல் தந்தையெனவும், தருமஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.

இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரிவில்வாட் கையர் மன்மதன் மேனியர்
தருமநீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருதரைத் தேடுவார்.

ஒன்று நோக் கலரும் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்றுணர் கொள்கையார். (ஆரணி. கா. 4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை உடையவர்கள், சிறந்த தருமவழியிலே தாங்கள் நின்று ஆராய்ந்து அத்தருமத்தை உலகமெங்கும் நிலைபெறச் செய்யுங் கருத்துடையவர்கள் என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.

“சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற்றாளி
லெங்கு மித்தனையிலக்கணம் யாவர்க்குமில்லை
செங்கண் விற்கரத்தி ராமனத்திரு நெடுமாலே
யிங்குதித்தன விண்டற நிறுத்துதற் கின்னும்

கோதண்டபாணியான இராமன், தர்ம ஸம்ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதாக சுக்ரீவ மஹாராஜனிடம் தெரிவித்த நவவ்யாகரண பண்டித ரான திருவடியின் வசனம்.

“உழைத்த வல்லிருவி னைக்கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்தவற் கியல்பல வியம்பி யென்செய்தாய்
பிழைத்தனை பாவியுன் பெண்மையா லென்றான்.”

பலபிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை ஒழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங் களை எல்லாம் தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தம னான இராமபிரான், என்பதாக, தாரையிடம் வாலியின் வசனம்.

அறமன்னானுட னெம்பியன்பினோ
டுறவுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெறவொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிறவென்னா மிதின்ப மியாவதோ. (கிட்கி. சம்பாதி 45)

தர்மஸ்வரூபியான இராமபிரான் திறத்தில் ஜடாயு உயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.

இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரிதத்தினாலே, தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன என்பதற்குப் போதிய சான்றாகும்.

(தொடர்வது இராமாவதார காலம்)

.


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக