வியாழன், 16 மே, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்

இரண்டாவது அங்கம்  ----  முதற்களம்

(அநுக்கிரகை ஓர் கையில் தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையில் துளசி புஷ்பங்களும் ஏந்தி வருகின்றனள்)

அநுக்கிரகை:- எங்கோ காலடி சப்தம் கேட்கின்றதே? யாராக இருக்கக்கூடும்? நமது தந்தையாக விருக்கலாமோ? அவர் என் சகியின் நிலையை அறிந்துகொண்டால் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து விடுவாரே? என்ன செய்வது?

(இதற்குள் சுசீலை வருகிறாள்)

சுசீலை:- சகி! எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமா யிருக்கிறது . இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனமல்லவா? ஆகையால், நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன். அவர் ஆராதனம் முடிந்ததும் உத்யானம் வருவதாகக் கூறியிருக்கிறார்.

அநுக்கிரகை:- ஹூம்! இதென்ன காரியம்? இது ஜுரமா? மதனதாபந்தானே? இதற்கேன் பயப்படவேண்டும்? தந்தையிடம் கூறியதை யவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம். ஏற்கனவே அவள் உண்மையைக் கூறமாட்டாது மறைக்கின்றனள். தந்தை வருமுன்பே அவளிடமிருந்து உண்மையை யறிந்து, நான் தூது சென்றது முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப்படுத்தி விடுவோம்.

சுசீலை:- இனியவள் உண்மையைக் கூறாதிருக்க முடியாது. (இருவரும் செல்கின்றனர்)

இரண்டாவது அங்கம் முதற்களம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக