வியாழன், 27 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 24

விராட பர்வம்

கீசக வதம்

வினா 1.- இவ்வாறு யமதர்மராஜன்‌ சொல்லி மறைந்ததும்‌ தர்மபுத்திரர்‌ எவ்வாறு அக்ஞாதவாஸம்‌ செய்வதாக ஒப்புக்கொண்டார்‌?

விடை. தாம்‌ பிராம்மண வேஷம்‌ பூண்டு கங்கபட்டர்‌ எனப்பெயர்‌ வைத்துக்‌ கொண்டு விராடராஜனிடம்‌ சூதாடி இனிமையான வார்த்தைசொல்லி அவனைச்‌ சந்தோஷப்‌ படுத்துவதாகவும்‌, அவ்வரசன்‌ அதிக சந்தோஷப்பட்டு “நீர்‌ இதற்கு முன்பு எங்கிருந்தீர்‌ என்று கேட்டால்‌ “நான்‌ யுதிஷ்டிரரது ராஜஸபையில்‌ இருந்தேன்‌. அவருக்கும்‌ எனக்கும்‌ அதிக பேதம்‌ இருப்பதாக எண்ணி ஒருவரும்‌ சரிவர அங்கு நடந்து கொள்ளவில்லை. நாங்கள்‌ இருவரும்‌ அவ்வளவு பிராண ஸ்நேகிதராய்‌ இருந்தோம்‌ என்று சொல்லுவேன்‌" என, தர்மபுத்திரர்‌ தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார்‌.

வினா 2.- பீமன்‌ எவ்வாறு காலங்கழிப்பதாகச்‌ சொன்னான்‌?

விடை... “வல்லபன்‌ என்கிற சமையற்கார வேஷம்‌ பூண்டு, அரசன்‌ பாகசாலையில்‌ வேலைக்கமர்ந்து எனது திறமையை நன்றாய்க்காட்டிப்‌ பாகசாலைக்‌ கதிபதி யாவேன்‌. மேலும்‌ எனது தேக பலத்தால்‌ சமையலுக்கு வேண்டிய விறகு முதலிய வைகளை நான்‌ சுமந்து வருவேன்‌. காட்டிலுள்ள புலி, கரடி, முதலிய கொடிய மிருகங்களோடும்‌ அரசன்‌ முன்பு சண்டையாடி, அவனைச்‌ சந்தோஷப்படுத்துவேன்‌. மல்லகஜட்டிகளோடு மல்ல யுத்தம்‌ செய்து ஜெயம்பெறுவேன்‌. “நீ முன்பு எங்கு இருந்தாய்‌" என்று அரசன்கேட்டால்‌ நான்‌ இத்தொழில்களைச்‌ செய்துகொண்டு யுதிஷ்டிரரிடம்‌ இருந்தேன்‌” என்று சொல்லுவேன்‌. “என்‌ விஷயத்தில்‌ நீங்கள்‌ கவலைப்படவேண்டாம்‌” என்று பீமன்‌ சொன்னான்‌.

வினா 3- அர்ஜுனன்‌ எவ்வேஷம்‌ பூண்டு அக்ஞாதவாஸம்‌ செய்வதாகச்‌ சொன்னான்‌?

விடை.- இந்தச்சமயத்தில்‌ இந்திரலோகத்தில்‌ ஊர்வசி தனக்குக்கொடுத்த சாபம்‌ அர்ஜுனனுக்கு ஞாபகம்‌ வர, "நான்‌ பிரகந்நளை என்கிற பெயரோடு கூடிய ஒரு பேடி உருக்கொண்டு விராடராஜன்‌ அந்தப்புரத்திலுள்ள பெண்களுக்குக்‌ கதை சொல்லுதல்‌, பாட்டுக்கற்பித்தல்‌, நாட்டியங்‌ கற்பித்தல்‌ முதலிய தொழில்களால்‌ அரசனையும்‌, அவன்‌ பெண்சாதி முதலியவர்களையும்‌ திருப்திப்படுத்துவேன்‌. “நீ முன்பு எங்கு இருந்தாய்‌” என்று யாராவது கேட்டால்‌ “திரெளபதியிடம்‌ வேலைக்காரியாய்‌ இருந்தேன்‌ என்று சொல்லி ஒருவரும்‌ அறியாத வண்ணம்‌ நான்‌ மறைந்து வாஸம்‌ பண்ணுவேன்‌" என்று அர்ஜுனன்‌ எடுத்துரைத்தான்‌.

வினா 4.- நகுலன்‌ எப்படி ஒருவரும்‌ அறியாதபடி விராட நகரத்தில்‌ ஒருவருஷம்‌ வாஸம்‌ செய்யப்போகிறதாகச்‌ சொன்னான்‌?
விடை.- "நான்‌ தாமக்கிரந்தி எனப்பெயர்‌ வைத்துக்கொண்டு விராடராஜனது குதிரைகளை நன்றாய்ப்‌ பாதுகாத்துக்‌ கொண்டு ஒருவருஷ காலத்தைத்‌ தள்ளிவருவேன்‌. அப்பொழுது யாராவது என்னைப்பற்றி விசாரித்தால்‌ நான்‌ தர்மபுத்திரரது குதிரைகளை மேற்பார்வை யிட்டுக்கொண்டிருந்தவன்‌ என்று சொல்லி என்னை எவராலும்‌ கண்டு பிடிக்க முடியாதபடி ஜாக்கிரதையாய்‌ ஒருவருஷம்‌ முடிகிறவரையில்‌ இருப்பேன்‌" என்றான்‌.

வினா 5.- ஸகாதேவன்‌ எவ்வாறு காலங்கழிக்கப்‌ போகிறதாகச்‌ சொன்னான்‌?

விடை... "நான்‌ தந்திரபாலன்‌ என்கிற பெயரோடு விராடராஜனது பசுக்கூட்டங்களை ஒழுங்காய்ப்‌ பாதுகாத்து வருவேன்‌. அப்பொழுது என்னைப்பற்றி யாராவது விசாரித்தால்‌, நான்‌ தர்மபுத்திரரது கோதனத்தை ரக்ஷித்து வந்த கோபாலத்‌ தலைவன்‌ என்று மறுமொழி சொல்லி என்னை ஒருவரும்‌ அறியாத வண்ணம்‌ ஒரு வருஷத்தை எளிதில்‌ கழிப்பேன்‌" என்று எடுத்துரைத்தான்‌.

வினா 6.. திரெளபதி எவ்வாறு தனது உண்மை உருவைக்‌ காட்டாது ஒரு வருஷம்‌ காலங்கழிக்கப்‌ போகிறதாகச்‌ சொன்னாள்‌?

விடை... "அந்தப்புரத்தில்‌ பூமுடித்தல்‌, சந்தனம்‌ கரைத்தல்‌, தலைபின்னல்‌ முதலிய தொழிலைச்‌ செய்யும்‌ தாதிப்‌ பெண்ணாக வேஷம்தரித்து, நான்‌ ஸைரந்திரி என்னும்‌ பெயர்‌ பூண்டு விராடராஜன்‌ பெண்சாதியாகிய ஸுதேக்ஷணாதேவி இடம்‌ வேலைக்கு அமருவேன்‌. என்னைப்‌ பற்றி அவள்‌ கேள்விகள்‌ கேட்டால்‌, நான்‌ திரெளபதியின்‌ தாதி என்று சொல்லுவேன்‌. இவ்வொரு வருஷம்‌ என்‌ பாதிவிருத்தி யத்திற்குப்‌ பங்கம்‌ வாராது இருப்பதற்காக நான்‌ இராஜபத்தினியிடம்‌ எனக்கு பர்த்தாக்கள்‌ ஐந்து கந்தர்வர்கள்‌ என்றும்‌, அவர்கள்‌ எங்கும்‌ உலாவிக்‌ கொண்டிருப்பார்கள்‌ என்றும்‌. என்னைத்‌ துராசையோடு பார்த்தவர்களை உடனே தவறாது கொல்லுவார்கள்‌ என்றும்‌ சொல்லி பயப்படுத்துவித்து, ஸுகமாய்‌ ஒரு வருஷம்‌ ஒருவருக்கும்‌ தெரியாது விராட பட்டணத்தில்‌ வாழ்வேன்‌" என்று திரெளபதி கூறினாள்‌.

வினா 7.- இவ்வாறு பாண்டவர்கள்‌ ஒரு வழியாய்த்‌ தீர்மானித்த பிறகு யார்‌ எவ்வாறு இவர்களுக்குப்‌ புத்திமதி கூறினது? பின்பு என்ன நடந்தது?

விடை... பாண்டவர்களது குருவாகிய தெளம்யர்‌ இராஜ ஸேவை செய்யவேண்டிய விதத்தை நன்றாய்‌ எடுத்துச்‌ சொல்லி, "அகலாது அணுகாது தீக்காய்வார்போல, மன்னரைச்‌ சேர்ந்தொழுகுவார்‌" என்ற பொருளை, நன்கு விளக்கிக்‌ காட்டினார்‌. அதன்‌ பின்பு தெளம்யர்‌ பாண்டவர்களை விராட நகரத்திற்கு அனுப்பிவிட்டு அவர்களது அக்னிஹோத்ராக்னியை துருபதராஜனது பட்டணத்திற்கு எடுத்துச்சென்றார்‌.

வினா 8.- இவ்வாறு தெளம்யர்‌ சென்றதும்‌, விராடநகரப்‌ பிரவேசம்‌ செய்யுமுன்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... தெளம்யர்‌ சென்றதும்‌, பாண்டவர்கள்‌ தமது ஆயுதங்கள்‌ எல்லாவற்றையும்‌ விராட பட்டணத்தின்‌ வெளியில்‌ மயானத்திலிருக்கும்‌ வன்னிமரத்தில்‌ வைத்துக்‌ கட்டி அதன்‌ முன்பு ஒரு பிணத்தையும்‌ கட்டிவிட்டார்கள்‌. இதனால்‌ ஒருவரும்‌ ஆயுதங்களைத்‌ தொடமாட்டார்கள்‌ என்கிற தைரியம்‌ அவர்களுக்கு வந்து விட்டது. அதன்‌ பின்பு பிறர்‌ அறியாது தங்களை ஒருவரை ஒருவர்‌ விராட பட்டணத்தில்‌ அழைத்துக்கொள்ள முறையே தமக்கு ஜயன்‌, ஜயந்தன்‌, விஜயன்‌, ஜயத்ஸேனன்‌, ஜயத்பாலன்‌ என்ற ஸங்கேதப்‌ பெயர்களையும்‌ அவர்கள்‌ ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இது முடிந்ததும்‌ விராடபட்டணம்‌ புகுமுன்‌ யுதிஷ்டிரர்‌ ஜகத்‌ மாயையாகிய துர்க்கா தேவியைத்‌ துதிக்க அவள்‌ பிரத்யக்ஷமாகிப்‌ பாண்டவர்களுக்கு ஜயம்‌ கூடிய சீக்கிரத்தில்‌ வரும்‌ என்று அனுக்கிரகித்து மறைந்தாள்‌.

வினா 9- பாண்டவர்கள்‌ விராட நகரத்தில்‌ எவ்வாறு பிரவேசித்தனர்‌? அங்கு என்ன நடநடந்தது?

விடை... பாண்டவர்கள்‌, தர்மபுத்திரர்‌ முதல்‌ வரிசையாய்க்‌ கொஞ்ச நாழிகைக்கு ஒவ்வொருவராக விராடநகரத்துள்‌ பிரவேசித்தார்கள்‌. கடைசியாய்த்‌ திரெளபதி விராடநகரத்தில்‌ பிரவேசித்தாள்‌. இவர்களைக்‌ கண்டதும்‌ அரசனும்‌, அவன்‌ மனைவியும்‌ வெகுமரியாதை செய்து அவரவர்கள்‌ மனத்தின்படி அவரவர்களை வேலை செய்து கொண்டு தம்மிடத்தில்‌ இருக்கும்படி உத்தரவு கொடுத்தார்கள்‌. பாண்டவர்கள்‌ தாம்‌ எண்ணியபடி விராடநகரத்தில்‌ ஸுகமாய்‌ வஸிக்கத்‌ தொடங்கினர்‌. ஸைரந்திரியை, அவளுக்குக்‌ கந்தர்வரது காவல்‌ இருக்கிறது என்று உணர்ந்து, அரசன்கூடக்‌ கண்ணெடுத்துப்‌ பார்க்கப்‌ பயந்திருந்தான்‌. திரெளபதி தனது கற்புக்குக்‌ குறைவுவராது அங்கு வாழ்ந்து வந்தாள்‌. பாண்டவர்கள்‌ தத்தமக்குக்‌ கிடைத்தவைகளை மற்றவர்களுக்கும்‌ இரகஸியமாய்க்‌ கொடுத்து ஸுகமாய்‌ வாழ்ந்து வந்தார்கள்‌.

வினா10.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ வாழ்ந்து வருகையில்‌ விராட பட்டணத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது? அதில்‌ யாருடைய சக்தி வெளிவந்தது?

விடை... நான்காவது மாதம்‌ விராடநகரத்துச் சிவன்‌ கோயிலில்‌ உத்ஸவம்‌ வந்தது. அக்காலத்தில்‌ ஜீமூதன்‌ என்கிற மல்லனது அதிகாரத்துக்குட்பட்டு அனேக மல்லர்கள்‌ இராஜஸபைக்கு வந்தார்கள்‌. ஜீமூதனோடு எதிர்த்து மல்ல யுத்தம்‌ பண்ண ஒருவருக்‌ கும்‌ மனம்‌ துணியவில்லை. அப்பொழுது விராடராஜன்‌ வேண்டுகோளின்படி வல்லபன்‌ (பீமன்‌) என்கிற மடைப்பள்ளி அதிகாரி ஜீமூதனை எதிர்த்தான்‌. வல்லபன்‌ வெகு விசித்திரமான யுத்த வரிசைகளை எல்லாம்‌ ஸபையார்‌ மகிழும்படி காட்டிவிட்டு கடைசியில்‌ ஜீமூதனைக்‌ கொன்றான்‌. இதனால்‌ பீமனது பலம்‌ எல்லாருக்கும்‌ தெரிய வந்தது.

வினா 11.- பீமன்‌ அன்று முதல்‌ என்ன செய்ய வேண்டி வந்தது? மற்றையவர்கள்‌ பின்பு என்ன செய்தார்கள்‌?

விடை... இவனுக்குப்‌ பலத்தில்‌ நிகர்‌ ஒருவரும்‌ இல்லை என்று அரசன்‌ இவனைக்‌ காட்டிலிருந்து பிடித்துவந்த யானை, புலி, சிங்கம்‌ முதலியவைகளோடு, சண்டை செய்யும்படி ஏவ, பீமன்‌ அவ்வாறே அவைகளோடு விசித்திர யுத்தம்‌ செய்து, அரசனை ஸந்தோஷப்‌ படுத்தினான்‌. இதுபோலவே தம்மால்‌ கூடியவரையில்‌ மற்றையவர்களும்‌ தம்வேலைகளை ஒழுங்காய்ச்‌ செய்து தமது எஜமானர்களைத்‌ திருப்திப்படுத்தினார்கள்‌. இவைகளைப்‌ பார்த்திருந்த திரெளபதிக்கு மிகுந்த துக்கமுண்டாக அதை அவள்‌ வெளியில்‌ காட்டிக்கொள்ளாது பெருமூச்சு மாத்திரம்‌ விட்டுக்‌ கொண்டிருந்தாள்‌.

வினா 12- இவ்வாறு பாண்டவர்கள்‌ வாழ்ந்து வருங்கால்‌ அவர்களுக்கு எப்படி கஷ்டம்‌ யாரால்‌ வந்தது?

விடை.- இவ்வாறு பாண்டவர்கள்‌ 10 மாஸம்‌ விராட நகரத்தில்‌ கஷ்டமின்றிக்‌ காலங்கழித்து விட்டார்கள்‌. இந்த ஸமயத்தில்‌ ஸுதேக்ஷணாதேவியின்‌ ஸஹோதரனாயும்‌, விராடராஜன்‌ ஸேனாதிபதியாயும்‌ இருந்த கீசகன்‌ என்ற துராத்மா தற்செயலாய்‌ திரெளபதியைக்‌ கண்டுவிட்டான்‌. உடனே அவனுக்கு அவளிடம்‌ ஆசை உண்டாக அவளருகே சென்று தனது ஆசையை வெளியிட்டான்‌.

வினா 13.- திரெளபதிக்கு வந்த இந்தக்‌ கஷ்டத்தை யார்‌ எவ்வாறு ஏன்‌ அதிகப்படுத்தி விட்டார்கள்‌?

விடை.- திரெளபதி தன்னால்‌ இயன்ற மட்டும்‌ நயமாயும்‌, பயமாயும்‌ தன்‌ வார்த்தைகளால்‌ கீசகனைக்‌ தடுக்க, அவன்‌ தனது ஸகோதரியான ஸுதேக்ஷ்ணையிடம்‌ சென்று தன்‌ ஆசையைத்‌ தெரிவித்தான்‌. அவள்‌ ஸைரந்திரியின்‌ புருஷர்களாகிய கந்தர்வர்களின்‌ மஹத்வத்தை எடுத்துச்சொல்லிக்‌ கீசகனைத்‌ தனது ஆசையை அடக்கும்படி சொன்னாள்‌. கீசகன்‌ மாறாதது கண்டு அவனிடம்‌ ஸைரந்திரியைத்‌ தான்‌ தனிமையாய்‌ அனுப்புவதாகச்‌ சொல்லி, ஸகோதர வாஞ்சையால்‌ ஸுதேக்ஷணாதேவி ஸைரந்திரியை அழைத்துக்‌ கீசகன்‌ வீடுசென்று மது வாங்கி வரும்படி ஏவினாள்‌. அவள்‌ எவ்வளவோ காரணங்களோடு மறுத்துச்சொல்லியும்‌ இராஜபத்தினி கேட்காது பிடிவாதமாய்‌ இருக்க, கடவுள்‌ மேல்‌ பாரத்தைப்‌ போட்டு விட்டு மதுவாங்கிவரப்‌ பாத்திரங்களை எடுத்துக்‌ கொண்டு கீசகன்‌ வீட்டை நோக்கித்‌ திரெளபதி புறப்பட்டாள்‌. இவ்வாறு ஸுதேக்ஷணாதேவி ஸகோதர வாஞ்சையால்‌ திரெளபதியின்‌ கஷ்டத்தை அதிகப்படுத்தினாள்‌.

வினா 14- மதுவாங்கி வரப்போன திரெளபதியின்‌ கதி என்னமாயிற்று? அங்கு என்னென்ன நடந்தது?

விடை. கீசகன்‌ விட்டை நோக்கிப்‌ புறப்பட்ட திரெளபதி, போகும்‌ வழியில்‌ எஸூர்யபகவானைத்துதிக்க அவர்‌ ஒரு இராக்ஷஸனைத்‌ திரெளபதியைக்‌ காப்பாற்றும்‌படி ஏவினார்‌. அவன்‌ மறைந்து கொண்டே திரெளபதியின்‌ பின்னே புறப்பட்டான்‌. திரெளபதி கீசகன்‌ வீடுசென்றதும்‌, தான்‌ வந்த காரியத்தைத்‌ தெரிவித்து சீக்கிரம்‌ மதுவைக்‌ கொடுக்கவேண்டும்‌ என்று கேட்டாள்‌. கீசகன்‌ திரெளபதியை நயமாய்‌ முதலில்‌ தன்‌ வசம்‌ செய்யப்பார்த்து முடியாதது கண்டு, அவளது வலதுகையைப்‌ பிடித்தான்‌. அவள்‌ அதைத்‌ தனது கற்பின்‌ பலத்தால்‌ திமிறிக்‌ கொண்டு வெளியே ஓட ஆரம்பிக்கக்‌ கீசகன்‌ அவளது மேல்துணியின்‌ நுனியைப்‌ பிடித்துக்கொண்டான்‌. உடனே தன்‌ கற்பின்‌ மகிமையால்‌ கீசகனைத் திரெளபதி கீழே தள்ளிவிட்டு தனக்கு வந்த ஆபத்தைத்‌ தெரிவித்துக்கொள்ள தர்மபுத்திரர்‌ வீற்றிருக்கும்‌ விராடராஜன்‌ ஸபையை நோக்கி வெகு பதட்டத்தோடு ஓடி வந்தாள்‌. பின்னே வெறி கொண்டு ஓடிவந்த கீசகன்‌ இராஜஸபை வாயிலில்‌ ஸகலரும்‌ பார்த்துக்கொண்டிருக்கையில்‌ திரெளபதியின்‌ கூந்தலைப்‌ பற்றி இழுத்து அவளைக்‌ காலால்‌ உதைக்க, அவள்‌ மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தாள்‌.

வினா 15.- இப்படிச்செய்த கீசகனுக்கு என்ன ஆபத்து வந்தது?

விடை.- ஸூர்ய பகவானால்‌ அனுப்பப்பட்ட இராக்ஷஸன்‌ கீசகன்‌ திரும்புகையில்‌ அவனைக்‌ காற்றின்‌ பலத்தைப்‌ போன்ற பலத்தை வைத்து இடிக்க ஸபையிலிருந் தோர்‌ ஸகலரும்‌ மகிழ்ச்சி அடையும்படி கீசகன்‌ அடியற்ற மரம்‌ போல்விழுந்து மூர்ச்சை போனான்‌. கொஞ்ச நாழிகையானதும்‌ கீசகன்‌ எழுந்து மிகுந்த வெட்கத்‌ தோடு தனது அரண்மனைக்கு ஓடிப்போனான்‌.

வினா 16.- மூர்ச்சை தெளிந்து எழுந்ததும்‌, திரெளபதி என்ன செய்தாள்‌? ஸபையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... இவ்வாறு கீசகன்‌ செய்ததைக்‌ கண்டதும்‌ ஸபையில்‌ அப்பொழுது இருந்த பீமனுக்குக்‌ கோபம்‌ அதிகரிக்க, அவன்‌ அருகிலிருந்த பச்சை மரத்தைப்‌ பார்த்தான்‌. இந்தக்‌ குறிப்பை அறிந்த யுதிஷ்டிரர்‌ பீமனைக்‌ கையமர்த்திவிட்டு 'விறகுக்காக இராஜஸபையிலிருக்கும்‌ பச்சை மரத்தை ஏன்‌ பார்க்கிறாய்‌? உனக்கு வேண்டுமானால்‌ ஊருக்கு வெளியிலிருக்கும்‌ மரங்களைப்‌ பார்த்துக்கொள்‌ என்று இரண்டு பொருள்படும்படி சொன்னார்‌. இதன்‌ இரகஸியத்தை அறிந்துகொண்டு பீமன்‌ கோபத்தை அப்பொழுது அடக்கிக்கொண்டான்‌. உடனே திரெளபதி தனக்கு வந்த கேட்டையும்‌ தனது பர்த்தாக்களது வைபவத்தையும்‌, அவர்கள்‌ அப்பொழுது அசட்டையாய்‌ இருப்பதையும்‌, விராடராஜனது ஆண்மையற்ற குணத்தையும்பற்றி வெகுவாக இராஜஸபையில்‌ விஸ்தரிக்கத்‌ தொடங்கினாள்‌. இவைகளைக்‌ கண்ட யுதிஷ்டிரர்‌, அதிகமாய்ப்‌ பேசுவது பெண்களுக்கு அழகல்ல என்றும்‌ அவளது பர்த்தாக்கள்‌ ஏதாவது செய்யத்தக்க ஸமயம்‌ இன்னும்‌ வரலில்லை என்றும்‌, ஆதலால்‌ அந்தப்புரம்‌ உடனே அவள்‌ செல்லவேண்டும்‌ என்றும்‌ சொல்ல, திரெளபதி தனது பர்த்தாக்களை நொந்துகொண்டு அந்தப்புரம்‌ சென்றனள்‌.

வினா 17.- இதன்‌ பின்பு கீசகன்‌ விஷயத்தில்‌ திரெளபதி என்ன பிரயத்தினம்‌ செய்தாள்‌?

விடை... கீசகனை உயிரோடு வைத்திருந்தால்‌ தனது கற்பிற்குக்‌ கேடுவரும்‌ என்கிற பயம்‌ திரெளபதியின்‌ மனதில்‌ குடிகொண்டது. வெகு நாழிகை யோசனை செய்த பிறகு இக்காரியத்தை முடிக்க வல்லவன்‌ பீமன்‌ என்று அவளுக்குத்‌ தோன்றியது. இரவில்‌ ஸகலரும்‌ தூங்கிக்‌ கொண்டிருக்கையில்‌ திரெளபதி மடைப்பள்ளியில்‌ புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பீமனை எழுப்பித்‌ தனக்கு வந்த கஷ்டங்களையும்‌, அப்பொழுது வந்திருக்கும்‌ கஷ்டத்தையும்‌ வெகுவாக எடுத்துச்‌ சொன்னாள்‌. பீமன்‌ உடனே கீசகனைக்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கொல்லுவதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 18.- கீசகனைக்‌ கொல்லும்‌ விஷயத்தில்‌ பீமன்‌ திரெளபதிக்கு என்ன உபாயம்‌ சொன்னான்‌?

விடை... திரெளபதி கீசகனது ஆசையைப்‌ பூர்த்தி செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்குத்‌ தகுந்த இடம்‌ இராஜகுமாரிகள்‌ நாட்டியம்‌ பழகும்‌ ஊருக்கு வெளியில்‌ இருக்கும்‌ நாடகசாலையே என்று சொல்லி, அங்கு கீசகனை இரவில்‌ வரவழைத்‌தால்‌, அப்பொழுது தான்‌ திரெளபதிக்கு பதிலாக நாடகசாலையில்‌ இருந்து வரும்‌ கீசகனை அன்றிரவே கொல்லுவதாகத்‌ திரெளபதிக்குப்‌ பீமன்‌ தனது எண்ணத்தை வெளியிட்டான்‌. திரெளபதியும்‌ அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டாள்‌.

வினா 19.- திரெளபதி பின்பு என்ன செய்தாள்‌?

விடை... பீமன்‌ சொல்லியவாறே, திரெளபதி கீசகனைத்‌ தன்‌ வசம்‌ செய்ய, அவன்‌ அன்றிரவே ஊருக்கு வெளியிலிருக்கும்‌ நாடகசாலை யண்டை வருவதாகச்‌ சொல்லிப்‌ போனான்‌. நடந்த விஷயங்கள்‌ எல்லாவற்றையும்‌ திரெளபதி பீமனிடம்‌ சொல்ல, அவன்‌ அன்றிரவு திரெளபதியையும்‌ கூட அழைத்துக்கொண்டு நாடக சாலை வந்து திரெளபதியை முன்‌ கதவின்‌ ஓரத்தில்‌ நிறுத்திவிட்டு, தான்‌ அங்கு போட்டிருக்கும்‌ கட்டிலில்‌ படுத்துக்கொண்டு கீசகனது வரவை எதிர்பார்த்திருந்தான்‌.

வினா 20.- கீசகன்‌ அங்கு எவ்வாறு வந்தான்‌? பின்பு என்ன நடந்தது?

விடை.- இரவு எப்பொழுது வரப்போகிறதென்று எதிர்பார்த்திருந்த கீசகன்‌, மிகுந்த ஆவலோடு நாடகசாலை வந்து அங்கு இருட்டாயிருப்பது கண்டு மெதுவாய்‌ கட்டில ருகில்‌ சென்று திரெளபதியை அழைத்தான்‌. உடனே பீமன்‌ திரெளபதியினது குரலை வகித்து பதில்‌ கொடுக்க, கீசகனுக்கு ஆசை அதிகரித்தது. உடனே கீசகன்‌, படுத்திருக்கும்‌ பீமனது கையை மிகுந்த ஆவலோடு பிடிக்க அது மிகக்கடினமாய்‌ இருப்பதைக்கண்டு திகைத்தான்‌. இது தான்‌ ஸமயம்‌ என்று பீமன்‌ கட்டிலை விட்டெழுந்து கீசகனோடு யுத்தம்‌ செய்யத்தொடங்கினான்‌. இருவரும்‌ வெளியில்‌ சப்தம்‌ கேட்காது சண்டையிடக்‌ கடைசியில்‌ பீமன்‌ கீசகனைக்‌ கொன்றான்‌. உடனே அவனது தலையையும்‌ கைகால்களையும்‌, முறித்து அவனது வயிற்றில்‌ அடைத்து அவனது தேகத்தை ஒரு பிண்டமாக்கிச்‌ சாலையிலிருந்த ஒருவிளக்கைக்‌ கொண்டு வந்து பீமன்‌ திரெளபதிக்குக்‌ கீசகனது நிலையைக்‌ காட்டினான்‌.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 23

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

விடை.- தர்மபுத்திரர்‌ சொன்ன விடைகளைக்கேட்டு யக்ஷன்‌ மகிழ்ந்து, இறந்த தம்பிகளுள்‌ யாராவது ஒருவனை எழுப்பிக்கொண்டு போகும்படி தர்மபுத்திரருக்கு உத்தரவு கொடுத்தான்‌.

வினா 134.- தர்மபுத்திரர்‌ யாரை எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌? என்‌? அவர்‌ எப்படித்‌ தமது உறுதியைக்‌ காட்டினார்‌?

விடை. நகுலனை அவர்‌ எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌. இப்படி நகுலனைத்தேடி எடுத்ததற்குக்‌ காரணம்‌ என்னவென்று யக்ஷன்‌ கேட்க, தர்மபுத்திரர்‌ “என்‌ தகப்பனாருக்கு இரண்டு பெண்சாதிகள்‌. அவர்களுள்‌ நான்‌ ஒருத்திக்கு மூத்தபிள்ளை, நகுலன்‌ மற்றைப்‌ பெண்‌ சாதிக்கு மூத்தபிள்ளை. ஆகையால்‌ நகுலனை நான்‌ தர்மப்படி எழுப்பிக்கொள்ள வேண்டியது" என, யக்ஷன்‌, "பீமனையாவது அர்ஜுனனை யாவது எழுப்பிக்கொள்ளும்‌, அவர்கள்‌ உமக்கு நேரான தம்பிகள்‌, நகுலன்‌ சிற்றம்மையின்‌ பிள்ளை: என்று எவ்வளவோ சொல்லியும்‌, தர்மபுத்திரர்‌ தர்மத்திலிருந்து விலகாது நகுலனையே எழுப்பி விடவேண்டும்‌ என்று உறுதியாய்‌ இருந்தார்‌.

வினா 135.- இப்படி தர்மபுத்திரர்‌ உறுதியாய்‌ இருக்க என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- இவரது உறுதிக்கு யக்ஷன்‌ மெச்சி, அவர்‌ தம்பிமார்‌ நால்வர்களையும்‌ எழுந்து வரும்படி செய்தான்‌. இதன்‌ பின்பு யக்ஷன்‌ தனது உண்மை ரூபமாகிய யமதர்ம ரூபத்தைக்‌ காட்டிப்‌ பாண்டவர்களை ஆசீர்வதித்து அவர்களது வனவாஸம்‌ 12 வருஷங்களும்‌ முடிந்தன என்று சொல்லி, அவர்களுக்கு அக்ஞாதவாஸம்‌ (மறைந்தவாஸம்‌) செய்யத்‌ தகுந்த இடம்‌ விராடபட்டணம்‌ என்று தெரிவித்து, அவர்கள்‌ எப்படிப்பட்ட வேஷம்‌ தரித்தாலும்‌ ஸரி, அவர்களை (இனி ஒரு வருஷம்‌ வரையில்‌ ஒருவராலும்‌ கண்டுபிடிக்க முடியாமலிருக்கட்டும்‌ என்று அனுக்கிரஹி த்து விட்டு யமதர்மன்‌ மறைந்தான்‌.

ஆரண்ய பர்வம் நிறைவுற்றது.

தொடரப்போவது விராட பர்வம்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

ஶ்ரீமஹாபாரதம் வினா விடை 22

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ படித்தவனாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- வேதங்களைப்‌ படித்தலால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ மேன்மையை அடைகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- ஸந்நியாஸத்தால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ புத்திமானாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- பெரியோருக்குப்‌ பணிவிடை செய்தலால்‌.

யக்ஷன்‌:- பிராமணர்களுக்கு என்ன கெட்டகுணம்‌ இருக்கும்‌?

தர்மபுத்திரர்‌:- பரநிந்தை.

யக்ஷன்‌:- வாயுவைவிட வேகமானது எது?

தர்மபுத்திரர்‌:- மனஸ்‌. ‌

யக்ஷன்‌:- இறப்பவர்களுக்குத்‌ தகுந்த ஸ்நேகிதர்‌ யார்‌?

தர்மபுத்திரர்‌:- அவர்கள்‌ செய்த தர்மமே.

யக்ஷன்‌:- மதங்களின்‌ முடிவான பயன்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனோ விசாலம்‌.

யக்ஷன்‌:- கீர்த்தியைத்‌ தாங்கி நிற்பவை எவை?

தர்மபுத்திரர்‌:- தானமும்‌ தர்மமும்‌.

யக்ஷன்‌:- ஸுகம்‌ எதனால்‌ உண்டாகும்‌?

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கையால்‌.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான தனம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- அறிவு.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான ஸுகம்‌ யாது ?

தர்மபுத்திரர்‌:- கிடைத்தவரையில்‌ திருப்தி அடைவதே.

யக்ஷன்‌:- சிறந்த தர்மம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- அஹிம்ஸை.

யக்ஷன்‌:- ஸுகம்‌ கொடுக்கும்‌ நிரோதம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- மனோ நிரோதம்‌.

யக்ஷன்‌:- ஒருநாளும்‌ நீங்காத ஸங்கம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- ஸத்ஸங்கம்‌.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ நம்மை எல்லாரும்‌ விரும்புவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- கர்வத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ துக்க நிவர்த்தி? ‌

தர்மபுத்திரர்‌:- கோபத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஒருவன்‌ தனவானாவான்‌?

தர்மபுத்திரர்‌:- ஆசையை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஸுகமுண்டு?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையை.

யக்ஷன்‌:- எதனால்‌ ஸ்நேகிதர்கள்‌ விரோதிகளாவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையால்‌.

யக்ஷன்‌:- ஒருவன்‌ எதன்படி நடக்கவேண்டும்‌?

தர்மபுத்திரர்‌:- சிஷ்டாசாரப்படி.

யக்ஷன்‌:- ஸந்யாஸத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- ஸ்வதர்மாசரணம்‌.

யக்ஷன்‌:- மனோநிரோதத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அகக்கரண புரக்கரணத்‌ தண்டம்‌.

யக்ஷன்‌:- தித்க்ஷையின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- விரோதிகளிடத்திலும்‌ துவேஷமின்மை.

யக்ஷன்‌:- வெட்கத்தின்‌ லக்ஷணமென்ன?

தர்மபுத்திரர்‌:- கெட்டகாரியத்தை மறுபடியும்‌ செய்யாமை.

யக்ஷன்‌:- அறிவு என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பரம்பொருளை அறிதல்‌.

யக்ஷன்‌:- சாந்தம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சித்த ஸமாதானம்‌.

யக்ஷன்‌:- தயை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பிராணிகளுக்கு நன்மை செய்ய எண்ணுதல்‌.

யக்ஷன்‌:- கபடமற்றதென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனம்‌ சலியாதிருத்தல்‌.

யக்ஷன்‌:- ஜயிக்க முடியாத விரோதி யார்‌?

தர்மபுத்திரர்‌:- கோபம்‌.

யக்ஷன்‌:- ஸ்திரமான வியாதி எது

தர்மபுத்திரர்‌:- பிறர்‌ பொருளை விரும்பல்‌.

யக்ஷன்‌:- யார்‌ நேர்மையானவர்கள்‌? யார்‌ திருடர்கள்‌!

தர்மபுத்திரர்‌:- முறையே, பூத தயை உடையோர்‌; பிராணிகளை வருத்துவோர்‌.

யக்ஷன்‌:- அஞ்ஞானமென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திர ஞானமின்மை.

யக்ஷன்‌:- சோம்பல்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திரவிஷயத்தில்‌ மனம்‌ செல்லாமை.

யக்ஷன்‌:- துக்கம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அஞ்ஞானம்‌.

யக்ஷன்‌:- பொறுமை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- காமக்ரோதாதிகளை அடக்கல்‌.

யக்ஷன்‌:- உண்மையான கர்மானுஷ்டானம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- சித்தசுத்தி,

யக்ஷன்‌:- பிறப்பு, படிப்பு, நன்னடக்கை, வேதாத்தியயனம்‌ இவைகளுள்‌ எது பிராம்மணனுக்கு முக்கியமானது? ‌

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கை.

யக்ஷன்‌:- எது ஆச்சரியகரமானது?

தர்மபுத்திரர்‌:- உலகில்‌ ஒவ்வொருநாளும்‌ ஜனங்கள்‌ இறந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்‌. உயிரோடிருக்கிறவர்‌ இதைப்பார்த்துக்‌ கொண்டிருந்தும்‌ தாம்‌ மாத்திரம்‌ இறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணுகிறார்கள்‌. இதுதான்‌ மிகவும்‌ ஆச்சரியமானது.

யக்ஷன்‌:- எது மோக்ஷத்திற்கு வழி?

தர்மபுத்திரர்‌:- வேதங்கள்‌ பலவாறாய்‌ இருக்கின்றன. தர்க்கத்தால்‌ பயனில்லை. ரிஷிகளது அபிப்பிராயங்கள்‌ பேதப்பட்டிருக்கின்றன. மதவிஷய உண்மைகளோ இரகஸியமாக இருக்கின்றன. ஆகையால்‌ சிஷ்டாசாரமே மோக்ஷமார்க்கம்‌.

யக்ஷன்‌:- எது விசேஷமான சங்கதி?

தர்மபுத்திரர்‌:- அக்ஞானாந்தகாரம்‌ நிறைந்த உலகமாகிய கொப்பரையில்‌, ஸூர்யன்‌ என்கிற நெருப்பை இராப்பகலாகிய விறகுகளால்‌ மூட்டி, மாஸங்கள்‌, ருதுக்களாம்‌ கரண்டிகளால்‌, காலன்‌ என்ற சமயற்காரன்‌ பிராணிகளைச்‌ சமைத்துக்கொண்டே இருக்கிறான்‌. இதுதான்‌ விசேஷமான ஸங்கதி.

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌.கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

புதன், 19 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம்–வினா விடை 21

வினா 126.- இவ்வாறு காம்யகவனத்தில்‌ வஸிக்கையில்‌ தர்மபுத்திரர்‌ மனதில்‌ என்ன கஷ்டம்‌ உண்டாயிற்று? இதை யார்‌ எவ்வாறு நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்டது?

விடை.- கர்ணன்‌ அர்ஜுனனைக்‌ கொன்றுவிடுவானே என்ற பயம்‌ அடிமுதல் தர்மபுத்திரர்‌ மனதில்‌ இருந்தது. இதை யறிந்து இந்திரன்‌ தனது பிள்ளையாகிய அர்ஜுனனைக்‌ காப்பாற்றுவதற்காக கர்ணனிடம்‌, அவனோடு பிறந்த கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளை, யாசித்துப்‌ பெற்றுக்கொள்வதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 127.- இவ்விஷயம்‌ கர்ணனுக்குத்‌ தெரியவந்ததா? எப்படி? கர்ணன்‌ என்ன தீர்மானம்‌ செய்தான்‌?

விடை.- கர்ணன்‌ தகப்பனாராகிய ஸூர்ய பகவான்‌ பிராமண உருக்கொண்டு கர்ணனுக்கு இந்திரனது தீர்மானத்தைத்‌ தெரிவித்து அவன்‌ உடன்பிறந்து அவனுக்குத்‌ தோல்வி வராதிருக்கும்படி செய்யும்‌ கவச கர்ணகுண்டலங்களை இந்திரனுக்குக்‌ கொடுக்கக்கூடாது என்ற புத்திமதி கூறினார்‌. கொடையில்‌ சிறந்த கர்ணன்‌ இதற்கு ஒப்பவில்லை. உடனே ஸூர்யன்‌ நீ இந்திரனிடம்‌ இருந்து சத்ருக்களைக்‌ கொல்லும்படியான ஒரு சக்தி ஆயுதத்தை வாங்கிக்‌ கொண்டு இவைகளைக்கொடு' என்று சொல்லி மறைய, கர்ணன்‌ அவ்வாறு செய்வதாய்த்‌ தீர்மானித்தான்‌.

வினா 128.- இந்திரன்‌ எவ்வாறு வந்து என்ன செய்தான்‌?

விடை.- இந்திரன்‌ ஒருகிழப்பிராமணன்‌ உருக்கொண்டு, கர்ணனிடம்‌ வந்து கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளைத்‌ தனக்குத்‌ தரவேண்டுமென்று கேட்டான்‌. உடனே இவைகளால்‌ தனக்கு உள்ள மேன்மைகளையும்‌, இவைகளைக்‌ கொடுத்துவிட்டால்‌ தனக்கு உண்டாகும்‌ தீங்குகளையும்‌ எடுத்துக்‌ கர்ணன்‌ சொல்லி, இந்திரனைத்‌ தனது தானத்திற்குப்‌ பதில்‌ ஒரு பெரிய விரோதியைக்‌ கொல்லத்தக்க ஒரு ஆயுதம்‌ தரவேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டான்‌. இந்திரன்‌ அவ்வாறே ஒருசிறந்த பகைவனை மாத்திரம்‌ கொல்லத்தக்க இந்திரசக்தியைக்‌ கர்ணனுக்குக்‌ கொடுத்துவிட்டு கர்ணனது கவசத்தையும்‌, குண்டலங்களையும்‌ வாங்கிக்‌ கொண்டான்‌. இந்திரனது அனுக்கிரகத்தால்‌ கர்ணன்‌ இவைகளை இழந்தும்‌ முன்‌ போலவே விளங்கினான்‌.

வினா 129.- முன்‌ சொல்லியபடி திரெளபதிக்கு வந்த கஷ்டம்‌ நிவர்த்தியானதும்‌ பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌? அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ காம்யகவனம்‌ விட்டு துவைதவனம்‌ சென்றார்கள்‌. அங்கு ஒரு ரிஷியின்‌ நெருப்புண்டாக்கும்‌ கருவியாகிய அரணீக்கட்டைகள்‌ ஒரு மானின்‌ கொம்புகளில்‌ அகப்பட்டுக்‌ கொள்ள அது அவைகளைக்கொண்டு ஓடிப்போய்விட்டது. ரிஷிவந்து இதைப்‌ பாண்டவர்களிடம்‌ சொல்ல அவர்கள்‌ அந்த மான்‌ போனவழியே வெகுவிரைவாய்ச்‌ சென்றார்கள்‌. மான்‌ சில காலம்‌ கண்ணில்‌ பட்டும்‌ சில காலம்‌ மறைந்தும்‌ இவர்களைக்‌ காட்டில்‌ வெகு தூரம்‌ அலைத்து இழுத்துப்போக, இவர்களுக்குத்‌ தாகம்‌ அதிகரித்துவிட்டது. உடனே நகுலன்‌ ஒரு மரத்தில்‌ ஏறிச்‌ சுற்றுமுற்றும்பார்க்க, தூரத்தில்‌ ஒரு செழிப்பான சோலையைக்‌ கண்டான்‌; அங்கு இருக்கும்‌ தண்ணீரைக்‌ கொண்டுவருவதற்காக நகுலன்‌ புறப்பட்டுச்‌ சென்றான்‌.

வினா 130.- அந்தச்‌ சோலையில்‌ பாண்டவர்களுக்கு என்ன ஆபத்து நேரிட்டது? ஏன்‌?

விடை.- போன நகுலன்‌ அங்குத்‌ தண்ணீர்‌ இருப்பதைக்‌ கண்டு குடிக்க யத்தனிக்க அக்குளத்தைக்‌ காத்துவரும்‌ கொக்குரூபமான யக்ஷன்‌ ஒருவன்‌ அசரீரிபோல்‌ 'நான்‌ கேட்கும்‌ கேள்விகளுக்குத்‌ தகுந்த பதில்‌ சொல்லிய பின்புதான்‌ இந்தக்‌ குளத்து நீரை நீ குடிக்கவாவது வெளியே எடுத்துப்போகவாவது செய்யலாம்‌. அதற்கு முன்‌ நீயதைத்‌ தொடாதே என்று சொன்னான்‌. நகுலன்‌ இதைக்‌ கவனியாது தண்ணீரைக்‌ குடிக்க, உடனே கரையில்வந்து இறந்துவிழுந்தான்‌. நகுலன்‌ வராதது கண்டு தர்மபுத்திரர்‌ ஸஹாதேவனை அனுப்ப அவனும்‌ யக்ஷனது சொல்லைக்கவனியாது தண்ணீர்‌ குடித்தமையால்‌ கரையில்‌ இறந்து விழுந்தான்‌. இதுபோலவே அர்ஜுனனும்‌ பீமனும்‌ முறையே அக்குளக்கரைக்குப்போய்‌ இறந்து விழுந்தார்கள்‌.

வினா 131.- இவ்வாறு போன தம்பிமார்‌ ஒருவரும்‌ திரும்பி வராதது கண்டு யுதிஷ்டிரர்‌ என்ன செய்தார்‌?

விடை.- இவர்‌ மனங்கலங்கிக்‌ குளக்கரைவர, அங்குத்‌ தமது தம்பிகளிருக்கும்‌ நிலையைக்கண்டார்‌. முதலில்‌ துக்கமேலிட்டதால்‌ கொஞ்சம்‌ பிரலாபித்துவிட்டு, இவர்கள்‌ இறக்கக்‌ காரணம்‌ என்ன இருக்கலாம்‌ என்றும்‌ யோசித்தார்‌. தண்ணீர்‌ காரணமாயிருக்கும்‌ என்று அவருக்குத்‌ தோற்றவிலை. அவர்‌ உடனே தாமும்‌ இறப்போம்‌ என்று தண்ணீரில்‌ விழுந்தார்‌. அப்பொழுது வழக்கப்படி அசரீரி வாக்குண்டாகத்‌ தர்மபுத்திரர்‌ கொக்காகிய யக்ஷனைக்‌ கண்டார்‌. அவன்‌ அவரது தம்பிமார்‌ தனது கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லாது தண்ணீரைக்‌ குடித்ததால்‌ தான்‌ தானே அவர்களைக்‌ கொன்றுவிட்டதாகச்‌ சொன்னான்‌. இதைக்கேட்டதும்‌ தர்மபுத்திரர்‌ யக்ஷனைக்‌ கேள்விகளைக்‌ கேட்கும்படி சொல்ல, அவன்‌ கேட்ட கேள்விகள்‌ எல்லாவற்றிற்கும்‌ மனக்கலக்கமின்றி விடை கொடுத்தார்‌.

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 20

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை

ஆரண்ய பர்வம்

வினா 115 முதல் 125 வரை

வினா 115.- இங்கு ஸுகமாய்‌ வஸிக்குங்கால்‌ இவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது?

விடை... பாண்டவர்கள்‌ ரிஷிகளது காவலில்‌ திரெளபதியை வைத்துவிட்டு வேட்டையாடி பிராம்மணர்களுக்கு வேண்டிய ஆகாரங்களைத்‌ தினம்‌ கொண்டுவரப்‌ போவது வழக்கம்‌. அப்படிப்‌ போயிருக்கும்‌ ஒரு நாளில்‌ அங்கு பாண்டவர்களது தங்கை துச்சலையின்‌ புருஷனாகிய ஜயத்‌ரதன்‌ என்ற ஸிந்துதேசாதிபதி வர, தனியே யிருக்கும்‌ திரெளபதியைக்‌ கண்டு அவன்‌ மோஹித்தான்‌. தன்னாலியன்ற மட்டும்‌ திரெளபதியைத்‌ தன்பெண்சாதியாகும்படி கேட்டுக்கொண்ட போதிலும்‌, அவள்‌ இசையாதது கண்டு, அவளை ஜயத்ரதன்‌ பலவந்தமாய்‌ தனது இரதத்தில்‌ ஏற்றிவைத்துக்கொண்டு தன்‌ இராஜ்யத்தை நோக்கிச்‌ சென்றான்‌. இவனைத்‌ தடுக்க முடியாமல்‌ தெளம்யர்‌ முதலிய பிராம்மணர்கள்‌ தத்தளித்தார்கள்‌.

வினா 116.- திரெளபதியை யார்‌ எவ்வாறு மீட்டுக்கொண்டு வந்தது? ஜயத்ரதன்‌ கதி என்னமாயிற்று?

விடை... பாண்டவர்கள்‌ வந்ததும்‌ தெளம்யர்‌ முதலியவர்கள்‌ நடந்த ஸங்கதியைச்‌ சொல்ல, அவர்கள்‌ உடனே ஜயத்ரதன்‌ போனவழியை நோக்கிப்போனார்கள்‌. அங்கு ஜயத்ரதன்‌ திளெபதியைக்‌ கொண்டுபோவதைக்‌ கண்டு, அவனைத்தோற்கடிக்க, அவன்‌ ஓடத்தலைப்பட்டான்‌. உடனே அவனைப்‌ பீமன்‌ சென்று பிடித்துவந்து மூர்ச்சை போகும்படி அடித்து, ஐந்து குடுமிவைத்துப்‌ பாண்டவர்களது அடிமை யென்று அவனைச்‌ சொல்லும்படி செய்து, தர்மபுத்திரரது காலில்‌ விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்தான்‌. தர்மபுத்திரர்‌ சுத்த மனதோடு அவனை உடனே விடுவித்து "இம்மாதிரி காரியம்‌ இனிமேல்‌ செய்யாதே” என்று புத்திமதிகூறி அனுப்பிவிட்டார்‌

வினா 117.- அவமானப்பட்ட ஜயத்ரதன்‌ என்ன செய்தான்‌?

விடை.- விடுபட்டதும்‌ இவன்‌ கங்கோத்தரை சென்று பரமசிவனைக்குறித்துத்‌ தபஸுசெய்தான்‌. அவர்‌ பிரத்யக்ஷமாகி "என்னவரம்‌ வேண்டும்‌" என்று கேட்க, இவன்‌ "எனக்குப்‌ பாண்டவர்களை ஜயிக்கும்‌ சக்தி வேண்டும்‌" என, பரமசிவன்‌ அந்தச்சக்தி ஒருவருக்கும்‌ வராது என்றும்‌, அவர்கள்‌ பரம்பொருளாகி லோகபாலனார்த்தம்‌ அநேக திவ்ய அவதாரங்கள்‌ செய்தருளிய கிருஷ்ணபகவானது அருள்‌ பெற்றவர்கள்‌ என்றும்‌ எடுத்துக்காட்டி, "உனக்கு அவர்களை ஒருநாள்‌ தடுக்கும்‌ சக்தி வரட்டும்‌” என்று அனுக்கிரஹித்துப்‌ போனார்‌. இதைப்‌ பெற்றுக்‌ கொண்டு இக்கொடியவன்‌ தனது இராஜ்யத்தை அடைந்தான்‌.

வினா 118.- திரெளபதிக்கு வந்த ஆபத்தால்‌ துக்கமடைந்திருந்த பாண்டவர்களை யார்‌ எவ்வாறு தேற்றினார்‌.

விடை.- அப்பொழுது தர்மபுத்திரரைப்‌ பார்க்க மார்க்கண்டேயமஹாமுனி வர, அவரிடம்‌ தமக்குவந்த ஆபத்தை எடுத்துரைத்து வெகுவாகத்‌ தர்மபுத்திரர்‌ துக்கித்தார்‌. அவர்‌ இராமர்‌ ஸீதையை இழந்து, பட்டபாடுகள்‌ அடங்கிய இராமாயணக்‌ கதையைச்‌ சுருக்கி சொல்லி, தர்மபுத்திரரது துக்கத்தை மாற்றினார்‌.

வினா 119.- இராமாயண கதையின்‌ சுருக்க மென்ன?

விடை.- ஸூர்யவம்சத்தரசராகிய தசரதர்செய்த புத்திரகாமேஷ்டிமூலமாய்‌ பரம்பொருள்‌ இராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கினராய்‌ அவதரித்ததும்‌, இராம லக்ஷ்மணர்கள்‌ விசுவாமித்திரர்‌ பின்சென்று வில்வித்தை கற்று, தாடகை முதலிய இராக்ஷஸ குலத்தவரைக்கொன்றதும்‌, இராமர்‌ சிவதனுஸை ஒடித்து ஸீதையைக்‌ கல்யாணம்‌ செய்து கொண்டதும்‌, பிதிர்வாக்கிய பரிபாலனத்திற்காக அவர்‌ ஆரண்யம்‌ சென்றதும்‌, ஸஹோதர வாஞ்சையோடுவந்த பரதனுக்கு அவர்‌ தமது பாதுகைகளைக்‌ கொடுத்ததும்‌, பின்பு பஞ்சவடியில்‌ இருக்குங்கால்‌ அவர்‌ மாயமாய்‌ வந்த மானைப்பிடிக்கப்‌ போய் ஸீதையை இழந்து பரிதபித்ததும்‌, குற்றுயிராய்‌ இருந்த ஜடாயுவிடமிருந்து அவர்‌ ஸீதைபோன வழியை அறிந்து ஸுக்ரீவனோடு ஸ்நேகம்‌ செய்து வாலியை மறைந்து பாணம்‌ விட்டுக்‌ கொன்றதும்‌, பின்பு ஹனுமார்‌ விஸ்தாரமான ஸமுத்திரத்தைத்‌ தாண்டி ஸீதை இராவணனது அசோகவனத்தில்‌ கஷ்டப்படுவதை அறிந்துவந்து ஸ்ரீராமரிடம்‌ சொன்னதும்‌, வானர ஸேனையோடு இராமர் ஸேதுக்கரை வந்ததும்‌, இராவணன்‌ தம்பியாகிய விபீஷணர்‌ என்கிற பகவத்‌ பக்தர்‌ இராமரைச்‌ சரணமடைந்ததும்‌, நளன்‌ என்ற வானரம்‌ இராமரது ஏற்பாட்டின்பேரில்‌ ஸேதுபந்தம்‌ செய்ய வானரர்கள்‌ இலங்கை சேர்ந்ததும்‌, அங்கதன்‌ இராவணனிடம்‌ தூது சென்றதும்‌, இராவண ஸேனையோடு வானரஸேனைகள்‌ விசித்திரயுத்தம்‌ செய்ததும்‌, லக்ஷ்மணர்‌ இந்திரஜித்தையும்‌, இராமர்‌ இராவணனையும்‌ கொன்ற விசித்திரமும்‌, ஸீதை தனது பரிசுத்த நிலையைப்‌ பலர்‌ அறிய அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்ததும்‌, யுத்தத்திலிறந்த வானரர்கள்‌ பிழைத்தெழுந்ததும்‌, விபீஷணருக்கு இலங்கையைக்‌ கொடுத்ததும்‌, இராமர்‌ அயோத்திக்குத்‌ திரும்பிவந்து பட்டாபிஷேகம்‌ செய்து கொண்டதுமே இராமாயண கதையின்‌ சுருக்கம்‌. (இக்கதையின்‌ விஸ்தாரத்தை இராமாயண வினா விடையில்‌ காண்க.)

வினா 120.- இந்த இராமாயணத்தைச்‌ சொல்லிய பின்னர்‌ மார்க்கண்டேயர்‌ எந்த விஷயத்தைக்‌ குறித்து என்ன சொன்னார்‌?

விடை... திரெளபதியைப்‌ போன்ற கஷ்டகாலங்களிலும்‌ தப்பிவந்து மேன்மை யடைந்த பதிவிருதைகள்‌ யாரையாவது கேட்டதுண்டா என்று கேட்ட யுதிஷ்டிரருக்கு மார்க்கண்டேயர்‌, ஸாவித்திரி தனது கணவனான ஸத்யவானை யமனிடம்‌ இருந்து மீட்டுவந்து எவ்வாறு மேன்மை யடைந்தாள்‌ என்ற விஷயத்தை விஸ்தாரமாய்ச்‌ சொன்னார்‌.

வினா 121.- இந்த ஸாவித்திரி யார்‌? இவள்‌ கல்யாண விஷயத்தில்‌ என்ன தடை ஏற்பட்டது? அப்பொழுது இவள்‌ என்ன செய்தாள்‌?

விடை... மத்திர ஸேனாதிபதியாகிய அசுவபதி என்பவருக்கு இவள்‌ ஸரஸ்வதியின்‌ அனுக்கிரகத்தால்‌ பிறந்த பெண்‌. இவளுக்குப்‌ பருவம்‌ வந்து தகுந்த நாயகன்‌ அகப்படாததுகண்டு, அவளைச்சில பரிவாரங்களோடு நாயகனைத்‌ தேடிவரும்படி அரசன்‌ அனுப்பினான்‌. இவள்‌ போய்த்‌ திரும்பி வந்ததும்‌, அரசன்‌ ஸபைக்கு நாரதர்‌ வந்து ஸாவித்திரிக்குத்‌ தக்க நாயகன்‌ யார்‌ என்று விசாரித்தார்‌. அப்பொழுது லாவித்திரி, தான்‌ காட்டில்‌ இராஜ்யமுமிழந்து, கண்களுமிழந்து கஷ்டப்படும்‌ துயமத்ஸேனர்‌ என்ற ஒர்‌ அரசனிருக்கிறார்‌ என்றும்‌, அவரது புத்திரராகிய ஸத்யவானே தனக்குத்‌ தகுந்த நாயகன்‌ என்றும்‌ மறுமொழி கூறினாள்‌. நாரதர்‌ "ஸத்யவானுக்குக்‌ காலம்‌ சீக்கிரத்தில்‌ முடியப்போகிறது, ஆகையால்‌ வேறு நாயகனைத்‌ தேடிக்கொள்‌" என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும்‌ ஸாவித்ரி மனம்‌ மாறவில்லை. இதைக்கண்டு நாரதர்‌ ஸாவித்ரியின்‌ மன உறுதியை மெச்சிக்‌ கொண்டு விவாஹத்திற்கு உத்தரவு கொடுத்து மறைந்தார்‌. உடனே கூடிய சீக்கிரத்தில்‌ விவாஹமும்‌ நடந்தேறியது.

வினா 122.- ஸத்யவானுக்கு முடிவுகாலம்‌ எவ்வாறு வந்தது? ஸாவித்ரி இதற்கு என்ன ஏற்பாடுகள்‌ செய்துகொண்டிருந்தாள்‌?

விடை. கல்யாணம்‌ முடிந்ததும்‌ ஸாவித்ரியும்‌ ஸத்யவானும்‌ கொஞ்சகாலம்‌ ஸுகித்து வருகையில்‌ ஸத்யவானது முடிவுநாள்‌ வந்து விட்டது. அதற்கு முன்‌ நான்கு நாள்‌ முதல்கொண்டே, ஸாவித்திரிபட்டினி இருந்து மஹாசுத்தியாய்‌ இருந்தாள்‌. அந்த முடிவு நாள்‌ இரவு தனது விரதத்தை முடிப்பதாக இவள்‌ எல்லாரிடத்தும்‌ சொல்லியிருந்தாள்‌. அன்று மாலை ஸத்யவான்‌ வழக்கம்போலவே கைக்‌ கோடரியை எடுத்துக்கொண்டு ஸமித்து வெட்டக் காட்டிற்குப்‌ புறப்பட்டான்‌. ஸாவித்திரியும்‌ தனது புருஷன்‌ மாமனார்‌ மாமியார்‌ முதலியவர்களிடம்‌ விடை பெற்று, ஸத்யவானோடு அன்று காட்டிற்குப்‌ போனாள்‌. காட்டிற்சென்று வெகுநாழிகை வெலைசெய்த பின்னர்‌ ஸத்யவானுக்கு ஒரு மாதிரியான தலைவலி வர, அவன்‌ வந்து ஸாவித்ரியின்‌ மடியில்‌ தலைவைத்துப்‌ படுத்துக்‌ கொண்டான்‌. கொஞ்ச நாழிகைக்கெல்லாம்‌ ஒரு கறுத்த மேனியையும்‌, சிவந்த கண்ணையும்‌, கையில்‌ பாசக்கயிற்றையும்‌ உடையவனாக ஒரு புருஷன்‌ ஸாவித்ரி கண்ணில்பட, அவள்‌ எழுந்து அவனுக்கு வந்தனம்‌ செய்து நின்றாள்‌. வந்தவன்‌, தான்‌ யமன்‌ என்று சொல்லி ஸத்யவானது உயிரைக்‌ கவர்ந்து கொண்டு ஸாவித்ரிக்குத்‌ தேறுதல்‌ சொல்லித்‌ திரும்பிப்போகச்‌ சொல்லிவிட்டு தான்‌ யமபட்டணம்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 123.- இவ்வாறு தனது கணவனது உயிரைக்‌ கவர்ந்துசென்ற யமன்‌ செல்ல ஸாவித்ரி என்ன செய்தாள்‌? இவள்‌ பிரயத்தனம்‌ எவ்வாறு முடிவு பெற்றது?

விடை.- ஸாவித்திரி யமனை விடாது தொடர்ந்து செல்ல, அவளது பாதிவிருத்தியத்திற்கு மகிழ்ந்து, கணவனது உயிரைத்‌ தவிரவேறு எதையும்‌ கேட்டுக்கொள்ள யமன்‌ அனுமதி கொடுத்தான்‌. உடனே அவள்‌ வரிசையாய்‌ தன்‌ மாமனார்‌ குருட்டுத்தனம்‌ நீங்கி இராஜ்யம்‌ பெறவேண்டும்‌ என்பதுபோன்ற ஸாதாரணமான வரங்களை முதலில்‌ கேட்டாள்‌. யமன்‌ இவைகளைக்‌ கொடுத்த போதிலும்‌, ஸாவித்ரி அவனைப்‌ பின்னும்‌ தொடர்ந்து சென்று தனது பிதாவுக்கு அனேகம்‌ பிள்ளை உண்டாக வேண்டுமென்று கேட்டாள்‌. தனக்குத்‌ தன்‌ கணவன்‌ அருகிலிருக்கிறவரை கஷ்டம்‌ தோன்றாது என்று சொல்லிக்கொண்டே யமனை விடாது பின்‌ தொடர்ந்து, அவனைத்‌ துதித்து, அரிய சாஸ்திர விஷயங்களை எடுத்துச்சொல்லி கடைசியில்‌ தனக்கு அனேகம்‌ பிள்ளைகள்‌ உண்டாக வேண்டுமென்றும்‌ ஸாவித்ரி கேட்க, யமன்‌ தான்‌ கொடுக்கும்‌ வரத்தின்‌ ஸ்வரூபத்தை அறியாது கொடுத்துவிட்டான்‌. பின்பு ஸாவித்ரி ஸத்யவானது உயிரை யாஜித்து, அதை யுக்தி பூர்வகமாய்த் தர்க்கித்து யமனிடம்‌ இருந்து பெற்றுக்‌ கொண்டு ஸத்யவான்‌ தேகம்‌ இருக்கும்‌ இடம்வரவே, அவன்‌ உயிர்த்து எழுந்தான்‌. ஸத்யவானைக்‌ கூட்டிக்கொண்டு வெகு மெதுவாய்‌ ஸாவித்ரி தன்‌ ஆசிரமம்‌ வந்து சேர்ந்தாள்‌.

வினா 124.- ஆசிரமம்‌ வந்ததும்‌ அவள்‌ அங்கு என்ன வினோதத்தைக்‌ கண்டாள்‌? எல்லாரும்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- இவள்‌ வந்ததும்‌ மாமனாருக்குக்‌ கண்‌ தெரிவதைக்‌ கண்டாள்‌. அங்குள்ள ரிஷிகள்‌ இந்த விசித்திரங்களுக்கு என்ன காரணம்‌ என்று ஸாவித்ரியைக்‌ கேட்க அவள்‌ நடந்த விஷயங்கள்‌ எல்லாவற்றையும்‌ சொன்னாள்‌. இந்த ஸ்திரீ தனது நாயகன்‌, மாமனார்‌, தகப்பனார்‌ ஆகிய இவர்களுக்கு ஏக காலத்தில்‌ செய்த உபகாரத்தைக்கண்டு ஸகல ரிஷிகளும்‌ அவளை வியந்து பேசினர்‌.

வினா 125.- இவ்விரு கதையையும்‌ சொல்லி முடித்த பின்பு மார்க்கண்டேயர் எவ்வாறு பாண்டவர்களைத்‌ தேற்றினார்‌?

விடை... இராமருக்கு ஆபத்து வந்து அது எவ்வாறு மங்களமாய்‌ முடிவுபெற்றதோ, அதுபோலப்‌ பாண்டவர்களுக்கு வந்த ஆபத்து அவர்களுக்கு நன்மையாகவே முடியும்‌ என்றும்‌, திரெளபதியைப்‌ போன்ற பதிவிரதா சிரோமணிகளது மேன்மை (ஸீதையின்‌ மேன்மைபோல்‌) எந்நாளும்‌ மாறாதிருக்கும்‌ என்றும்‌, அவர்கள்‌ தமது நாயகன்‌ முதலிய தம்மைச்‌ சேர்ந்தவர்களுக்கு ஸாவித்ரியைப்‌ போல்‌ நன்மை புரிவார்கள்‌ என்றும்‌ சொல்லிப்‌ பாண்டவர்களை மார்க்கண்டேயர்‌ தேற்றினார்‌.